Tuesday, February 24, 2009

ஈழத்தமிழினத்தின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பே விடுதலைப்புலிகள்: மருத்துவர் இராமதாசு

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பே விடுதலைப்புலிகள் என்று தமிழர்களின் தாயக பகுதியில் நாள்தோறும் தமிழ் மக்களை சிங்கள அரசு அழித்து வருவதைக் கண்டித்தும் வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் இன்று மதுரையில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் பா.ம.க. நிறுவனர் இராமதாசு உரையாற்றினார்.

’ஈழத்தமிழர்களின் தாய்மண்ணில் தற்போது தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பிரச்சினையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கூறி வருகிறது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தமிழர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்த பிரச்சினையில் இலங்கை அரசு என்ன சொல்கிறதோ அதை இந்திய அரசு ஏற்கக்கூடாது.

2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க., பா.ம.க. உட்பட 15 கட்சிகள் கையெழுத்திட்டு இருந்தோம். ஆனால் அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை பிரச்சனை தொடர்பாக நான் டெல்லியில் சோனியாகாந்தியை 35 நிமிடங்கள் சந்தித்து உரையாடினேன். அவர் ஆர்வத்துடனும், இரக்கத்துடனும் இலங்கை தமிழர் பிரச்சினையை கேட்டறிந்தார். அதன் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை சந்திக்கும்படி கூறினார்.

ஆனால் நான் அவரை சந்திப்பதற்கு முன்பே அவர் வெளியிட்ட அறிக்கை 7 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்து விட்டது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக 60 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அதில் 30 ஆண்டுகள் சாத்வீகமாகவும், 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தி.மு.க., பா.ம.க. உட்பட பல கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. இலங்கையுடன் வெளியுறவு கொள்கையை வகுக்கும்போது எங்கள் கருத்துக்களை கேட்காமல் வகுக்கக் கூடாது. தமிழக முதல்வரை கலந்து பேசாமல் இலங்கை தொடர்பான வெளியுறவு கொள்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள கூடாது. ஏனென்றால் ஜனாதிபதி உரைக்கு முரண்பாடாக பிரணாப் முகர்ஜியின் அறிக்கை அடுத்த நாளே அமைந்து விட்டது.

இலங்கையில் தற்போது நாள்தோறும் 100 பேர் வரை பலியாகி வருகிறார்கள். இப்போது நடக்கும் போர் தமிழ் இன அழிப்பு போராகும். இதை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அமைப்புத்தான் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகும். இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பத்தான் காவலர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது. எனவே 27-ந் திகதி போராட்டம் நடத்த மீண்டும் அனுமதி கேட்டு உள்ளோம். இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறினோம். ஆனால் அவர் நாங்கள் நாடகம் ஆடுவதாக கூறுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்காகத்தான் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று தனது உரையில் தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Monday, February 23, 2009

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் நாடகம்: பா.ம.க. நிறுவனர் ச. இராமதாசு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல் துறை தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அப்போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல் துறை மறுத்து விட்டது.

இந்நிலையில் தங்களின் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அந்த இயக்கத்தின் தலைவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அறிவித்தனர்.

அப்போது ராமதாஸ் கூறியதாவது:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதல்வர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலால் கொதித்துப் போயுள்ள வழக்கறிஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும்.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான்.

ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம்.

இலங்கைப் பிரச்னையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் என ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

நன்றி தினமணி (24.02.2009)

Monday, February 16, 2009

இலங்கைப் பிரச்னை: சோனியா தலையிட வேண்டும்- ராமதாஸ்

சென்னை, பிப். 16: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்தியா தலையிடக் கோரி சோனியாவிடம் தமிழ்நாடு காங்கிரஸôர் வற்புறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், பா.ம.க. நிறுவனர் ராமதாûஸ சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து, இலங்கையில் போரை நிறுத்த உதவ வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோருக்கு கடிதம் எழுதப் போவதாக அண்மையில் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சுதர்சனம் என்னை சந்தித்துப் பேசினார்.

ஹிட்லரை விடவும் கொடுமையான முறையில் ராஜபட்ச அரசு தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என நமது குடியரசுத் தலைவர் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

இவ்வாறு வேண்டுகோள் விடுத்தால் மட்டும் போதாது. போரை நிறுத்துமாறு இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும். இந்தியா அவ்வாறு கூறினால் இலங்கை நிச்சயம் பணியும்.

மேலும் இலங்கையில் போரை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆகியவற்றில் இந்தியா முறையிட வேண்டும். அவ்வாறு செய்வதற்கான தார்மிக உரிமை இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா ஐ.நா. சபைக்கு சென்றால் இரண்டே நாளில் போர் நிறுத்தம் ஏற்படும்.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கெனவே போர் நிறுத்தத்துக்கு தயார் என அறிவித்து விட்டனர். இனி இலங்கை அரசுதான் போரை நிறுத்த வேண்டும். அரசாங்கம் போரை நிறுத்தினால், உடனே போரை நிறுத்த விடுதலைப் புலிகளும் தயாராகவே உள்ளனர்.

ஆனால் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனை சரியல்ல. ஆயுதம் ஏந்தி போராடிய எந்த போராளிக் குழுவும் ஆயுதங்களை வீசிவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வந்ததாக வரலாறு இல்லை.

எனவே சண்டையை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என புலிகளை அழைப்பதே சரியானதாக இருக்கும்.

நம் மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட அப்போதைய இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் மற்றும் நமது வெளியுறவு அமைச்சகத்தின் தவறான அணுகுமுறையே காரணம்.

இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை இன்றும் தொடர்கிறது. அதனை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவுத் துறை செயலாளராகவும், வெளிநாட்டு விவகாரங்களில் ராஜீவ் காந்தியின் ஆலோசகராகவும் இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரன் இப்போது பெங்களூரில் உள்ளார்.

இலங்கைப் பிரச்னையில் இந்தியா எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி மத்திய அரசு அவருடன் ஆலோசிக்க வேண்டும்.

இதையெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து விளக்க வேண்டும்.

இதைத்தான் நான் சுதர்சனத்திடம் வலியுறுத்தினேன் என்றார் ராமதாஸ்.

நன்றி: தினமணி

Sunday, February 15, 2009

இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்:டாக்டர் ராமதாஸ் பேட்டி

இலங்கை பிரச்சினை என்பது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை போர் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல் என்றும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்றும் மட்டுமே இந்தியா கருதுகிறது. இந்தியாவின் இந்த கண்ணோட்டத்தில், இந்த பிராந்தியத்தில் மாறி வருகிற சூழ்நிலையை மனதில் கொண்டு தீவிரமான மாற்றம் ஏற்பட வேண்டும். என டாகடர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பகை நாடு பாகிஸ்தான், சீனாவும் நமக்கு பகை நாடு என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நமக்கு நட்பு நாடல்ல. இந்த இரு நாடுகளும் இலங்கையில் இப்போது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. இலங்கை போர்ப்படைக்கு தேவையான கன ரக ஆயுதங்களையும், எறிகணைகள் போன்ற குண்டுகளையும் சீனா வழங்கி வருகிறது. அத்துடன் திருகோணமலையில் சீனாவின் கப்பற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அம்பாந்தோட்டை என்ற இடத்தில் சீனா ஒரு முழு அளவிலான துறைமுகத்தை கட்டிக்கொண்டு வருகிறது. இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டால், அது சீனாவின் பராமரிப்பிலேயே இருந்து வரும்.

அதிபர் ராஜபக்ச தனது இளம் வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். அதுவும் சீனா சார்புடைய கம்யூனிஸ்டு பிரிவைச் சேர்ந்தவர், அவர் பதவிக்கு வந்த நாளிலிருந்து சீனாவுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துக் கொண்டு வருகிறார். இலங்கையுடன் வைத்துள்ள உறவின் மூலம் இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

இன்னொரு புறத்தில் பாகிஸ்தானும், இலங்கைக்கு பெருமளவில் ஆயுத உதவியும், போர் படைபயிற்சியும் அளித்து வருகிறது. இலங்கையைச் சேர்ந்த உளவுப்படையையும் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவுப் படையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் காரணமாக அண்மையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அந்த பயிற்சி அளிக்கப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். இந்த படையினரால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அனல் மின் நிலையம் போன்ற இந்தியாவின் கேந்திரமான இடங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு உருவானால், அது இந்தியாவின் நட்பு நாடாக விளங்கும் சிங்களர்களை விட தமிழர்கள் உண்மையாகவும், நட்புறவு கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். சிங்களர்களை நம்பி இந்தியா ஏமாந்து விடக்கூடாது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்களை செய்வதன் மூலம் இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்வதற்கு இந்திய அரசு முன் வரவேண்டும். இலங்கையில் 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் மிக குறுகிய பகுதியில் தஞ்சம் புகுந்து உணவு, தண்ணீர் இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களெல்லாம் போர்க்கைதிகளை அடைத்து வைக்கும் திறந்த வெளி சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் செய்திகள் வருகின்றன. அந்த திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை நாள் தோறும் கடத்திச் சென்று கொன்று குவிக்கிறார்கள். இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து பின்னர் கொல்லுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகள் தாக்கப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் முல்லைத்தீவு பகுதியிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று இலங்கை அரசு கெடு விதித்து எச்சரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அங்கிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அலுவலர்களை வெளியேற்றக்கூடாது என்றும், அவர்களை அங்கிருந்து திரும்பி அழைக்கக் கூடாது என்றும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்பி வைக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான தந்திகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சென்றடைய வேண்டும். தொலைபேசி, பேக்ஸ், இ-மெயில், தந்தி போன்றவை மூலம் இந்திய வேண்டுகோள்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு, நல்லுறவு, எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்து ஆகியவற்றை மனதில் நிறுத்தி இந்திய அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதாது. போரை நிறுத்து என்று கட்டளையிட வேண்டும். போர் நிறுத்தப்படாவிட்டால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும். நமது போர்ப்படையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள், இந்தியாவைச் சேர்ந்த செயற்கைக்கோள்கள், உளவு விமானங்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களின் உதவியையும் இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் அரசுக்கு விரோதமானவர்கள் என்று கருதும் நபர்களையெல்லாம் இலங்கை போர்ப்படையை சேர்ந்த உளவுப்படையினர் கடத்திச்சென்று படுகொலை செய்து வருவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இதற்காக இராணுவத்தை சேர்ந்த உளவுப்படையினர் வெள்ளைவான் என்ற வாகனத்தை பயன்படுத்தி கடத்திச்சென்று கொன்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரையில் இத்தகைய கடத்தல் மூலம் 8000 முதல் 10000-க்கும் மேற்பட்ட நபர்கள் கடத்தி செல்லப்பட்டு திரும்பி வரவில்லை என்று சொல்கிறார்கள். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள் மற்றும் கொலைகள் இவ்வாறுதான் நடந்துள்ளன.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Friday, February 13, 2009

இலங்கைக்கு செய்து வரும் உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

போரை நிறுத்தாவிட்டால், இலங்கையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு முதலில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் வாயிலாக இந்திய பேரரசு அறிவித்திருக்கிறது.

இலங்கையில், தமிழினப்படுகொலைக்கு காரணமான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய பேரரசு நடவடிக்கை வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கொந்தளித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு இப்போது ஓரளவு பலன் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை காண வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்த ஆறுதலான நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு நிலைப்பாடாக மாற வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு இலங்கை அரசு உடனடியாக செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக இலங்கையில் உள்ள அனைத்து தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்தியா உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

போரை ஊக்கப்படுத்தும் வகையில் எந்த உதவிகளையும் அளிக்க மாட்டோம் என்று எச்சரிப்பதுடன், இதுவரையில் அத்தகைய உதவிகளை அளித்து வந்திருந்தால் அவற்றையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் மருந்து பொருட்களை பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மூலம் வழங்கவும் இந்தியா முன்வரவேண்டும்.

இத்தகைய ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசை பணிய வைக்க முடியும். எனவே, அடுத்த கட்டமாக இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Tuesday, February 10, 2009

17ம் திகதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை மனித சங்கிலி போராட்டம்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

ஈழத்தமிழர்களை பாதுகாக்கக் கோரி எதிர்வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என இன்று சென்னையில் நடைபெற்ற இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஈழத்தமிழர்களை காக்கக்கோரி வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாக்குமரி வரை மனிதசங்கிலி நடத்துவது.

2. மதுரையில் 24ஆம் தேதியும், கோவை, திருச்சி, பாண்டி, சேலம், தூத்துக்குடியில் 19ஆம் தேதி மக்கள் திரள் பேரணி நடத்துவது.

3. ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து வெளிநாட்டு தூதர்களை சந்தித்து மனு கொடுப்பது.

4. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு இமெயில் அனுப்புவது.

5. ஈழத்தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் மரண சாசனத்தை பல இலட்சம் பிரதிகள் எடுத்தும், சி.டி.யில் பதிவு செய்தும் தமிழகம் முழுவதும் மக்களுக்கு விநியோகம் செய்வது

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் பேசிய இயக்கத் தலைவர்கள், தமிழக மக்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும் தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

நன்றி: தமிழ்வின்.காம் (10.02.2009)