Monday, February 16, 2009

இலங்கைப் பிரச்னை: சோனியா தலையிட வேண்டும்- ராமதாஸ்

சென்னை, பிப். 16: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்தியா தலையிடக் கோரி சோனியாவிடம் தமிழ்நாடு காங்கிரஸôர் வற்புறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், பா.ம.க. நிறுவனர் ராமதாûஸ சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து, இலங்கையில் போரை நிறுத்த உதவ வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோருக்கு கடிதம் எழுதப் போவதாக அண்மையில் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சுதர்சனம் என்னை சந்தித்துப் பேசினார்.

ஹிட்லரை விடவும் கொடுமையான முறையில் ராஜபட்ச அரசு தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என நமது குடியரசுத் தலைவர் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

இவ்வாறு வேண்டுகோள் விடுத்தால் மட்டும் போதாது. போரை நிறுத்துமாறு இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும். இந்தியா அவ்வாறு கூறினால் இலங்கை நிச்சயம் பணியும்.

மேலும் இலங்கையில் போரை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆகியவற்றில் இந்தியா முறையிட வேண்டும். அவ்வாறு செய்வதற்கான தார்மிக உரிமை இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா ஐ.நா. சபைக்கு சென்றால் இரண்டே நாளில் போர் நிறுத்தம் ஏற்படும்.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கெனவே போர் நிறுத்தத்துக்கு தயார் என அறிவித்து விட்டனர். இனி இலங்கை அரசுதான் போரை நிறுத்த வேண்டும். அரசாங்கம் போரை நிறுத்தினால், உடனே போரை நிறுத்த விடுதலைப் புலிகளும் தயாராகவே உள்ளனர்.

ஆனால் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனை சரியல்ல. ஆயுதம் ஏந்தி போராடிய எந்த போராளிக் குழுவும் ஆயுதங்களை வீசிவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வந்ததாக வரலாறு இல்லை.

எனவே சண்டையை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என புலிகளை அழைப்பதே சரியானதாக இருக்கும்.

நம் மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட அப்போதைய இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் மற்றும் நமது வெளியுறவு அமைச்சகத்தின் தவறான அணுகுமுறையே காரணம்.

இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை இன்றும் தொடர்கிறது. அதனை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவுத் துறை செயலாளராகவும், வெளிநாட்டு விவகாரங்களில் ராஜீவ் காந்தியின் ஆலோசகராகவும் இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரன் இப்போது பெங்களூரில் உள்ளார்.

இலங்கைப் பிரச்னையில் இந்தியா எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி மத்திய அரசு அவருடன் ஆலோசிக்க வேண்டும்.

இதையெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து விளக்க வேண்டும்.

இதைத்தான் நான் சுதர்சனத்திடம் வலியுறுத்தினேன் என்றார் ராமதாஸ்.

நன்றி: தினமணி

No comments: