Tuesday, July 29, 2008

தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை-பா.ம.க. நிறுவுனர் இராமதாசு

இலங்கைக் கடற்படை தாக்குதலில்இருந்து தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு குற்றம்சாட்டினார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசை வலியுறுத்தினார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தப் பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். மிக விரைவாகவும் அவசரமாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை இது என்றும் அவர் கூறினார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதுவரை நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களால் பயனில்லாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

பணவீக்கம் மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த 14 அம்ச திட்டத்தை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய திட்டங்களை நிறைவேற்றும்போது பிடிவாதம் கூடாது என்றும் அவர் கூறினார். இதற்கு அவர் நேரடியாக விளக்கம் அளிக்காவிட்டாலும் சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் தி.மு.க.வின் நிலையைத்தான் அவர் இவ்வாறு மறைமுகமாக குறை கூறியதாகத் தெரிகிறது.

விரைவில் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் சாமானிய மக்கள் பயனடையும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றார் அவர்.

விவசாயிகளின் பரிதாப நிலை குறித்தும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பிரதமர் மன்மோகனிடம் இராமதாசு எடுத்துரைத்தார்.

நிதியமைச்சர் சிதம்பரம், வேளாண் அமைச்சர் சரத் பவார் ஆகிய இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமதாசு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மன்மோகன் சிங்கும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளின் பிரச்னைகளைத் தெரிந்து அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க, சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை செல்லும் பிரதமர், மீனவர் மீதான தாக்குதலை நிறுத்துமாறு அந் நாட்டு தலைவர்களிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் என்றார் அவர்.

மீனவர் பிரச்னை குறித்து பிரதமரிடம் முறையிட்டபோது, மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்கலாம் என்று பிரதமர் யோசனை கூறியதாக இராமதாசு தெரிவித்தார்.

தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - அதிமுக இல்லாத புதிய அணி உருவாக்கப்பட வேண்டும். அந்த அணி காங்கிரஸ் தலைமையில் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் எஸ். ராமதாஸ் கூறினார்.
அப்படிப்பட்ட அணி உருவானால் அதற்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
திமுக - அதிமுக இல்லாத அணி காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி மிகவும் முனைப்பாக உள்ளது. அதில் பாமகவும் இடம் பெறும் என்றார் அவர்.

இரு கட்சிகளுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பாமகவுடனான உறவை திமுக அண்மையில் துண்டித்துக் கொண்டது.

Friday, July 25, 2008

பாமகவைப் பழிவாங்க ஆள்தூக்கிச் சட்டங்களை ஏவி விடுகின்றனர்-மருத்துவர் இராமதாசு

தைலாபுரத்தில் மருத்துவர் இராமதாசு அவர்கள் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தியைப் பெருக்க எந்த திட்டமும் செயல்படுத்தாததே இதற்குக் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


2006-ம் ஆண்டில் மின்உற்பத்தி மாநிலத்தின் தேவையைவிட அதிகமாக இருந்தது.

2004-ம் ஆண்டில் மின் உற்பத்தி 8690 மெகாவாட். மின்சாரத்தின் பயன்பாடு 5909 மெகாவாட் மட்டுமே.
மின் பயன்பாடு 2005-ல் 6500 மெகாவாட்டாகவும், 2006-ல் 7124 மெகாவாட்டாகவும், 2007-ல் 8600 மெகாவாட்டாகவும் அதிகரித்தது. 2008-ல் 9121 மெகாவாட் தேவைப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டரை ஆண்டில் பெருகி வரும் மின்தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை பெருக்க திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது.


இரண்டரை ஆண்டில் புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகள் வந்தன. புதிய தொழில்களின் ஒப்பந்தங்களுக்கு ஏற்ப மின் உற்பத்தியை பெருக்கவில்லை.


மதுவிலக்குக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது. மது விற்பனையை பெருக்குவதில் காட்டும் ஆர்வத்தை விட்டுவிட்டு மின்உற்பத்தியை பெருக்குவதில் தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டும்.

மின்தடையைக் கண்டித்து ஜூலை 28 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் பாமக சார்பில் மாவட்ட, வட்ட தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வீட்டு மனைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் முடிச்சூரில் 45 வீட்டு மனைகளை விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட அறிவிப்புக்குப் பின் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந் நிலையில் சென்னையில் டாடா நிறுவனத்துக்கு 25 ஏக்கர் நிலத்தையும், டி.எல்.எப். நிறுவனத்துக்கு 25 ஏக்கர் நிலத்தையும் அரசு தாரை வார்த்துள்ளது.
இந்த நிலங்கள் விற்கப்படவில்லை. 99 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
99 ஆண்டுகளுக்கு குத்தகை விடுவது என்பது விற்பதற்கு சமம்.

மணல் கொள்ளை, கல்விக் கட்டணக் கொள்ளை ஆகியவற்றை தடுத்து நிறுத்த பாமக தொடர்ந்து போராடி வந்தது. இதனால் பாமகவைப் பழிவாங்க ஆள்தூக்கிச் சட்டங்களை ஏவி விடுகின்றனர்.

அரசியல் கட்சிகளின் போராட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு அக் கட்சிகளே பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று 1992-ம் ஆண்டு அப்போது அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதில் விஷமிகள் பிரச்னை செய்தால் அரசியல் கட்சிகள் மீது பழி விழும் என்று திமுக அதை எதிர்த்தது. அவர்களுடன் சேர்ந்து நாங்களும் எதிர்த்தோம்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக ஒரு மசோதாவும் தாக்கல் செய்தது. ஆனால் தற்போது போராட்டம் நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பாய்ச்சுவது முதல்வரின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இதுவே பொதுமக்கள் விருப்பமும், பாமகவின் விருப்பமும்.

கம்யூனிஸ்ட்டுகள் 3-வது அணியுடன் கைகோர்த்துள்ளனர். கம்யூனிஸ்டுகள் குறித்த திட்டவட்டமான அறிவிப்பை திமுக இதுவரை வெளியிடவில்லை. இது திமுக 3-வது அணிக்கான கதவை திறந்து வைத்துள்ளதையே காட்டுகிறது.

சோம்நாத் சாட்டர்ஜி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்கட்சி விவகாரம். நாடாளுமன்றத்தில் கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி சிலர் வாக்களித்திருந்தால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு கட்டுபாடு முக்கியம்.

ஒரு கட்சியின் எம்.பி.யோ, எம்எல்ஏவோ மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவில்லை எனில் அக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் இரு பங்கு ஆதரவு இருந்தால் அவர்களைத் திரும்ப அழைக்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

தமிழக முதல்வர் கருணாநிதியை எம்.கே. என்று பலர் அழைப்பர். அவர் ஆட்சியில் எம்.ஓ.யூ. ஒப்பந்தம் கையெழுத்திடுவதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது. அவரை இனிமேல் எம்.ஓ.யூ. கருணாநிதி என்றே அழைக்கலாம் என்றார் ராமதாஸ்.

Thursday, July 24, 2008

தமிழ் ஓசை நாளிதழுக்கு அரசு விளம்பரம் இரத்து

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு நாளிதழான தமிழ் ஓசைக்கு பாமக-திமுக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அரசு விளம்பரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ம.க. தலைவர் கோ.க. மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Friday, July 18, 2008

கச்சத்தீவு: உருப்படியான பயனுள்ள நடவடிக்கை எதையும் முதல்வர் செய்யவில்லை-மருத்துவர் இராமதாசு

கச்சத்தீவு பிரச்னையைத் தீர்க்கும் அதிகார வாய்ப்புகள் இருந்த காலத்தில் அதைச் செய்யாமல் இப்போது உண்ணாவிரதம் என்ற நாடகத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி யாரை ஏமாற்றப் பார்க்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
1974-ல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்த ஒப்பந்தம்தான் இப்போதைய கொடுமைகளுக்கு முதற்காரணம். அப்போது கருணாநிதி தலைமையிலான தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது.
அதன்பிறகு மூன்று முறை முதல்வராகப் பொறுப்பு வகித்த நேரங்களில், தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகளைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
மத்திய ஆட்சியில் பங்கு வகித்த முக்கிய கட்சியாக இருந்தபோதிலும் அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, இப்போது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதையாக உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவது யாரை ஏமாற்றுவதற்காக?
உண்ணாவிரதம் இருப்பது தவறல்ல. ஆனால், மீனவர் பிரச்னைக்கு தில்லியில்தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமே தவிர, தமிழகத்தில் அல்ல.
தில்லிக்குச் சென்று தங்கி இருந்து வாதாட வேண்டும். கடலில் இந்திய மீனவரின் உயிருக்கு இலங்கை கடற்படையால் ஊறு நேர்ந்தால் இந்திய அரசு வேடிக்கை பார்க்காது என்று எச்சரிக்குமாறு வற்புறுத்த வேண்டும்.
இந்த உத்தரவாதம் கிடைக்கும் வரை சென்னை திரும்ப மாட்டேன் என்று அங்கேயே இருந்து சாதித்துக் காட்ட வேண்டும்.
இதற்கு மாறாக இங்கே உண்ணாவிரதம் என நாடகமாடுவது மீனவர்களை ஏமாற்ற மேற்கொள்ளும் முயற்சி.
ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, சுதந்திர நாளில் கோட்டையில் கொடி ஏற்றி வீர முழக்கம் செய்தது, பிரதமர்களுக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதியது ஆகியவற்றைத் தவிர உருப்படியான பயனுள்ள நடவடிக்கை எதையும் முதல்வர் செய்யவில்லை.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகள், வேண்டாதவர்கள் என கருதப்படும் அதிகாரிகளையும் பழி வாங்குவதில் காட்டும் வேகத்தில் நூறில் ஒரு பங்கு வேகத்தையாவது, கோபத்தையாவது கச்சத்தீவுப் பிரச்னையில் காட்டி செயல்பட்டிருந்தால் இப்பிரச்னைக்கு எப்போதோ தீர்வு ஏற் பட்டிருக்கும் என இராமதாசு கூறியுள்ளார்.
நன்றி: தினமணி

இந்தியாவில் மருத்துவம் முடிக்கும் 70 சதவீதத்தினர் அமெரிக்கா செல்வது கவலை அளிக்கிறது-நடுவண் அமைச்சர் அன்புமணி

சண்டீகர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய நடுவண் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேசியது:

தாய் நாட்டிலேயே ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 2.50 லட்சம் வெளிநாட்டு நோயாளிகள் இந்தியாவில் மருத்துவம் பெற வருகின்றனர். மருத்துவத் துறை தற்போது சிறந்து விளங்கி வருகிறது.

அதனால், வெளிநாட்டுப் பணியை மருத்துவர்கள் தேட வேண்டாம். தாய் நாட்டிலேயே சேவை செய்திட அர்ப்பணியுங்கள். இந்தியாவில் மருத்துவம் முடிக்கும் 70 சதவீதத்தினர் அமெரிக்கா செல்வது கவலை அளிக்கிறது என்றார்.

நன்றி: தினமணி