Monday, August 25, 2008

அண்ணா காட்டிய வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம் என கூறும் கருணாநிதி, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட மறுக்கிறார்

கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை பற்றி தகவல் தருவோருக்கு தமிழக அரசு வெகுமதி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறினார்.

திருவண்ணாமலையில் பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் மருத்துவர் இராமதாசு பேசியது:

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, மதுக்கடைகள் திறக்க மாட்டேன் என்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மக்களுக்கு நலத் திட்டங்களை தீட்ட மாட்டேன் என்றும் கூறினார்.

தற்போது, மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலம் கலர் டிவி, காஸ் அடுப்பு, இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் கருணாநிதி வழங்கி வருகிறார்.

அண்ணா காட்டிய வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம் என கூறும் கருணாநிதி, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட மறுக்கிறார். ஈரோட்டில் கள் இறக்கக் கூடாது என்ற கொள்கைக்காக தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை பெரியார் வெட்டிச் சாய்த்தார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒரு சொட்டு கூட இல்லாமல் ஒழிக்க என்னிடம் திட்டம் உள்ளது. அதை தமிழக முதல்வர் கருணாநிதி ஏற்க தயாரா?

கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்துவோர் பற்றிய விவரங்கள் குறித்து தகவல் அளிப்போரின் பெயர்களை இரகசியமாக அரசு வைத்திருக்கிறது. மேலும், அவர்களுக்கு தக்க சன்மானமும் அரசு அளிக்கிறது.

அதேபோல், கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை பற்றி தகவல் தருவோரின் விவரங்களை அரசு இரகசியமாக வைப்பதுடன், அவர்களுக்கு வெகுமதியும் தர வேண்டும் என்றார் இராமதாசு.

Monday, August 18, 2008

விவசாய சங்கங்கள் பலமாக இருக்க வேண்டும்-மருத்துவர் இராமதாசு

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் பாமக நிறுவனரும், தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனருமான ச. இராமதாசு.

திருச்சியில் இப் பேரியக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரும்பு பயிரிடுவோர் கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:

"விவசாய சங்கங்கள் பலமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் வேளாண்மையில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் நாம் நடத்தும் போராட்டத்துக்கு அவர்களே தங்களது சொந்தச் செலவில் வருவர். எனவே, விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் விவசாய சங்கங்கள் ஈடுபட வேண்டும்.
எந்த அரசையும், எந்த ஆட்சியாளரையும் குறை சொல்லவில்லை. ஆனால், குறை சொல்லும் நிலையில் மத்திய அரசு உள்பட எல்லா அரசுகளும், ஆட்சியாளர்களும் உள்ளனர்.

விவசாயிகளின் பிரச்னைகளை நன்கு தெரிந்த, புரிந்த அதிகாரிகள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை. விவசாயிகளின் பிரச்னைகளான உரத் தட்டுப்பாடு, விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்டவை பற்றி ஒவ்வொரு அரசும் அறிந்து கொள்வது அவசியம். ஆனால், அவ்வாறு அறிந்து கொள்வதில்லை.

நாம் பலமாக இல்லாததே இதற்குக் காரணம். நாம் பலமாக இருந்தால், அரசும் பயப்படும்.

சொட்டு நீர்ப்பாசனத்துக்கு 50 சத மானியம் வழங்கப்படும் என்பதே ஒரு ஏமாற்று வேலைதான். கருவிகளின் விலையை உயர்த்தி, அது விவசாயிகள் மீதுதான் சுமத்தப்படுகிறது. இதன்மூலம், அரசியல்வாதிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தைப்போல, சென்னையில் மிகப் பெரிய அளவில் கூட்டம் நடத்த வேண்டும். 2 நாள் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதற்கு முன்பு, சென்னை தீவுத் திடலில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். பின்னர், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியல் கலக்காமல், உழவர்களை ஒன்று திரட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தால் மட்டும் போதாது; ஓரிரு ஆண்டுகளுக்கு உரம், விதை போன்றவற்றையும் இலவசமாக வழங்க வேண்டும்.

வேளாண் துறை அமைச்சரும், அதிகாரிகளும் மாதந்தோறும் விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். விவசாய பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் எந்த நாடும் முன்னேற்றம் அடைய முடியாது. எல்லா காலத்திலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்' என்றார் இராமதாசு.

பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரியக்கப் பொதுச் செயலர் செ. நல்லசாமி வரவேற்றார். தலைவர் இல. சடகோபன் நன்றி கூறினார்.

கருணாநிதியை வரலாறு மன்னிக்காது

மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என பா.ம.க. நிறுவனர் ச. இராமதாசு என திருச்சிராப்பள்ளி மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் 17.08.2008 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூட்டத்தில் பேசியதாவது,

"மதுவை ஒழிப்பது தொடர்பாக இங்கு நிறைவேற்றப்பட்ட ஒட்டுமொத்தத் தீர்மானம் தமிழக அரசுக்கு எட்ட வேண்டும். அவ்வாறு எட்ட வேண்டுமானால், வீட்டில், தெருவில், ஊரில், குழாயடியில் இதுபற்றி பெண்கள் பேச வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு குடும்பத்தையும் சீரழிக்கும் இந்த மதுவை ஒழிக்க முடியும்.

மதுவை ஒழிக்க கடந்த 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தினாலும், வெற்றி கிட்டவில்லை. அதனால்தான், மகளிரைத் திரட்டி, இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

குடிப் பழக்கம் என்பது ஒரு கொடிய நோய். சமுதாயத்தைப் பாதிக்கும், வீட்டைக் கெடுக்கும் இந்த நோயை ஒழிக்க வேண்டும்.

மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களை ஒழிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து, செலவு செய்தாலும், ஒரு புதிய கொடிய நோயையும் உற்பத்தி செய்கிறது. அதனால், மரணம் ஏற்படுகிறது.

அதனால்தான், அரசு நடத்தும் மது வியாபாரத்தை மரண வியாபாரம் என்கிறோம். எனவே, மக்கள் நலன் காக்கும் இந்த அரசு, மது வியாபாரத்தைத் தவிர்க்க வேண்டும்.

திருப்பத்தூர் அருகேயுள்ள மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள 500 குடும்பங்களில் 180 குடும்பங்களில் பெண்கள் விதவைகளாக உள்ளனர். "குடி'யால் கணவர்கள் உயிரிழந்ததே இதற்குக் காரணம்.

மது வியாபாரத்தில் அரசு இலக்கு வைத்து விற்பனை செய்கிறது. ஊற்றிக் கொடுக்கும் வேலைக்கு பட்டதாரிகளை நியமித்துள்ளது கொடுமையானது.

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, மின் உற்பத்தி, குடிநீர் போன்றவற்றுக்குத்தான் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆனால், இந்த அரசு "குடி'க்கு இலக்கு வைத்து, விற்பனை செய்கிறது.

மதுவை ஒழிக்க வேண்டும் என உலக சுகாதாரப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தவிர, பெரியார், ராஜாஜி, அண்ணா, ஓமந்தூரார் உள்பட பலர் மது ஒழிப்புக்குப் பாடுபட்டனர். ஆனால், யார் சொல்லியும் நான்கைந்து தலைமுறைகளாகக் கேட்கவில்லை.

குடிப் பழக்கத்திலிருந்து இளைஞர்களைக் காக்க இந்த அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? கடும் சட்டம் கொண்டு வந்து மதுக் கடை இல்லா சமுதாயத்தை நாம் உருவாக்குவோம். இதற்கான ஆலோசனையும், ஒத்துழைப்பும் நாங்கள் அளிக்கிறோம். தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளனர். எனவே மதுக் கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது.

இளைய சமுதாயத்தினர் மதுவால் சீரழிந்து வருவதாக இங்கு பேசிய மகளிர் குறிப்பிட்டனர். இந்தக் குரலுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, மதுக் கடைகளை மூடினால் மட்டுமே கருணாநிதியை வரலாறு மன்னிக்கும் என்றார் இராமதாசு.
நன்றி தினமணி

Thursday, August 14, 2008

ஒரு அரசின் வலிமை, மக்களின் அறியாமையில் அடங்கியிருக்கிறது

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கவுன்சலிங் அட்டவணை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கவுன்சலிங்கை தாமதமாக நடத்தி, செட்டிநாடு மருத்துவக் கல்லூரியின் 97 இடங்கள் பறிபோனது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
""மருத்துவப் படிப்புக்கான மாணவர் கவுன்சலிங்கில் எந்தவிதத் காலதாமதமும் இல்லை; கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கால அட்டவணையின்படிதான் இந்த ஆண்டு கவுன்சலிங் நடைபெறுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


ஒரு அரசின் வலிமை, மக்களின் அறியாமையில் அடங்கியிருக்கிறது என்பதை என்றைக்கோ சொல்லி வைத்ததை இன்றைக்கும் தி.மு.க. அரசு நம்பிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இது காண்பிக்கிறது.


கடந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கிலேயே (ஜூலை 9, 2007 முதல் ஜூலை 16, 2007 வரை முதல் கட்ட கவுன்சலிங் நடைபெற்றது.) சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டன; கடந்த ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அட்டவணையிலும் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், இந்த ஆண்டு கவுன்சலிங் அட்டவணை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 4, 2008 முதல் ஜூலை 8, 2008 வரை முதல் கட்ட கவுன்சலிங் நடந்தது; இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் ஆகஸ்ட் 11 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போன்று சுய நிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், இந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கில் நிரப்பப்படவில்லை.


இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கவுன்சலிங் உடனடியாகத் தொடங்கப்படாமல், 34 நாள்கள் இடைவெளி விட்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கால தாமதத்தை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ""நிகர்நிலைப் பல்கலைக்கழகம்'' என்ற தகுதியைப் பெற்றுவிட்டது.

இதனால் செட்டிநாடு மருத்துவக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு இடம்கூட கிடைக்காமல் போய்விட்டது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வரை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி சென்று, அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் அளிக்கத் தேவையில்லை என தடையாணை பெற்ற வரலாறு இருக்கிறது.


அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கின்போதே, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பியிருந்தால் செட்டிநாடு மருத்துவக் கல்லூரியிடமிருந்தும் 97 இடங்கள் கிடைத்திருக்கும். இட ஒதுக்கீட்டுச் சலுகையின்படி சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்குக் கிடைத்திருக்க வேண்டிய 70 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் பறிபோயிருக்காது.


எனவே ""இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்து அறிவித்த கால அவகாசத்துக்குள் கவுன்சலிங் நடத்தப்படுகிறது; எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கவுன்சலிங் நடத்துவதில் கால தாமதம் எதுவும் இல்லை'' என்று பிரச்னையை திசை திருப்பாமல், இதற்குப் பொறுப்பானவர்கள் யார் எனக் கண்டறிய முழுமையான விசாரணையை நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும்' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


நன்றி: தினமணி, 14.08.2008

Friday, August 8, 2008

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்-பா.ம.க. தலைவர் கோ.க.மணி

சமூகநீதி அனைவரையும் சென்றடைய தொகுப்பு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, புதிய யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில ஒவ்வொரு குடும்பத்தையும் சமூக நீதி சென்றடைய வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பங்கீடு கிடைக்க வேண்டும். அதற்கு தொகுப்பு இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்.

அதாவது, தற்போது ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள இட ஒதுக்கீட்டை பிரித்து அதில் உள்ள சாதிகளுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் பங்கிட்டு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

இதற்காக சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும். இதே ஒதுக்கீட்டு முறையை பதவி உயர்வுகளுக்கும் வழங்க வேண்டும். தற்போது இந்த முறை கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டில் "கிரீமிலேயர்' முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
நன்றி தினமணி, 08.08.2008

கருணாநிதி ஆட்சி காலத்தில் மூன்று மாநிலங்களில் தமிழகத்தின் உரிமையை இழந்து நிற்கிறோம்

தமிழக முதல்வர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருப்பது அரசு நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது. இத் தீர்ப்பு தமிழகத்துக்கு அவமானம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இது குறித்து தைலாபுரத்தில் அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

"நீங்கள் எப்படி பட்டவர்? உங்கள் நடவடிக்கை வெறுத்து ஒதுக்கத்தக்கது' என்று முதல்வர் கருணாநிதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், சிங்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இக் கண்டனம் தமிழகத்துக்கு, ஏற்பட்ட மிகப்பெரிய தலைக்குனிவு. உச்சநீதிமன்றத்தின் கட்டளையை ஏற்று சரியாக பதில் மனு தாக்கல் செய்யாதது, அரசு நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது.
இதில் இரு வழக்கறிஞர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் ஒருநபர் கமிஷன் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜூலை 14-ம் தேதி அறிக்கை கொடுக்கப்பட்டு ஜூலை 17-ம் தேதி சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் காட்டிய வேகத்தை, உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டாமல் அரசு நிர்வாகம் கோட்டைவிட்டு விட்டது.

தூத்துக்குடியை மாநகராட்சியாக மாற்றுவதற்கு ஒரு கோடிக்கு செலவு செய்து மதுரை மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கும் விழா எடுத்துள்ளனர். இந்த ஆடம்பரத்தை முதல்வரும் அங்கீகரித்துள்ளார்.

சினிமாவில் ஆர்வம்
தமிழக முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகளில் சினிமாவை கண்டு களிப்பது, சினிமா பிரமுகர்களைச் சந்திப்பது, அது தொடர்பான விழாவில் பங்கேற்பது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை
கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாக கூறிக் கொண்டு 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப கொள்கையின் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் வேலைக்கு பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சம்தான். இதுபோல் வேலைகிடைத்தால் இரண்டரை ஆண்டுகளில் வேலையில்லாதோர் யாரும் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள். இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மைசூர், பெங்களூரில் சர்வே
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீண்டும் சர்வே செய்து ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கூறியுள்ளார். மைசூர், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளையும் சேர்த்து மீண்டும் சர்வே செய்யலாம். அங்கெல்லாம் 60 முதல் 70 விழுக்காடுவரை தமிழர்கள் வசிக்கின்றனர். கருணாநிதி ஆட்சி காலத்தில் மூன்று மாநிலங்களில் தமிழகத்தின் உரிமையை இழந்து நிற்கிறோம். இதற்கு கருணாநிதி செய்யும் சமரச அரசியலே காரணம்.

ஒகேனக்கல் திட்டத்துக்கு ஜப்பானின் நிதியுதவியை எதிர்பார்க்காமல் ஒப்பந்தம் போடப்பட்டவுடன் நிறைவேற்றியிருந்தால் இப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. மது விற்பனையில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கிறது. அதில் தருமபுரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
இங்குள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க ஜப்பான் நிதி உதவியைத்தான் எதிர்பார்க்க வேண்டுமா? என்றார் ராமதாஸ்.
நன்றி: தினமணி, 08.08.2008

Thursday, August 7, 2008

தமிழகத்தில் மாற்றத்துக்கு வழி என்ன?-மருத்துவர் இராமதாசு

தமிழகத்தில் மாற்றத்துக்கு, மாற்று வழி என்ன என்பது குறித்து ஒரே கருத்துள்ள தலைவர்கள் வழிகாட்ட வேண் டும் என்று பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்தார்.

நாத்திகம் இதழின் 50-வது ஆண்டு விழாவில் அவர் பேசிய தாவது: நமது மண், ஆறுகள், குளங்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றை இழந்து வருகிறோம். நமது இளைஞர்கள் மது, திரைப்படங்க ளால் சீரழிந்து வருகின்றனர்.

இதை எடுத்துச் சொல்லக் கூடிய நிலையில் நாமும் இல்லை. அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை.

இதை மாற்றவில்லையெனில், நமது முன்னோர்கள், தலைவர்கள் பாடுபட்டதெல்லாம் வீணாகப் போய்விடும். இல்லையெனில், தமிழர்களுக்கு விமோசனமே இல்லை. தமிழகத்தில் 4 தலைமு றைக்கு இளைஞர்கள் பலர் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டனர்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமி ழகத்தில் மது குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்று ஓர் ஆய்வு தெரி விக்கிறது.

தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வறட்டுக் கூச்சலாகத்தான் உள்ளது. சிற்றூர்களில் கூட பள்ளிகளில் ஆங்கில கல்வி முறை உள்ளது.

அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெ னில், தமிழ்வழியில் தரமான, கட்டாய, சமச்சீரான கல்வியை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் சென்னை முதல் கடலூர் வரை நிலங்களை பிற மாநிலத்தவர் வாங் கிக் குவிக்கின்றனர். இந்த மனை விற்பனை தமிழகம் முழுவதும் இனி தொடரும்.

நமது மண், மொழியை மட்டு மன்றி மீனவர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியவில்லை. இதற்காக வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இதையெல்லாம் மாற்றுவதற்கு வேறு என்ன வழி என்று தலைவர் கள் சிந்திக்க வேண்டும். இதற் கான மாற்று வழியை தலைவர் கள் கூறினால் அதை பின்பற்ற லாம்.

ஒரு காலத்தில் மத்தியில் கூட் டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று பேசிப் பேசி அவர்களின் தொண் டை கூட வறண்டுவிட்டது.
இதற்காகப் போடாத மாநாடுகள் இல்லை.


ஆனால், இன்று ஒரு பள் ளியோ அல்லது மருத்துவமனை யைத் தொடங்க வேண்டும் என் றால் கூட தில்லிக்கு தான் கோப்பு களைக் கொண்டு செல்ல வேண் டிய நிலை உள்ளது. மாநில சுயாட்சி அந்த அளவுக்கு உள் ளது. இதை யோசிக்க வேண்டும்.

எனவே, இதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து ஒரே கருத் துள்ள தலைவர்கள் கூடிப் பேசி வழிகாட்ட வேண்டும் என்றார் ராமதாஸ்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக் கண்ணு, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், நாத்திகம் இதழின் நிறுவனர் நாத் திகம் ராமசாமி, தமிழருவி மணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
நன்றி: தினமணி