Tuesday, March 31, 2009

இயக்குனர் சீமானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: பாமக நிறுவுனர் இராமதாசு

இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான்’’ என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் சீமான் கடந்த பெப்ரவரி 21-ம் தேதி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி சிறை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்ய அனுமதி கோரினார். இதற்கு சிறைத்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் சீமானுடன் பேச்சு நடத்தினார். உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சீமான் தனது போராட்டத்தைக் நேற்று கைவிட்டு மதியம் உணவு சாப்பிட்டார்.

இந்நிலையில் 31.03.2009 செவ்வாய் மாலை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாசு காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று இயக்குனர் சீமானை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராமதாசு, ‘’பழிவாங்கும் நடவடிக்கையினாலே இயக்குனர் சீமான் சிறையில் வாடுகிறார்.

இலங்கை தமிழர்கள் இனமே கூண்டோடு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து திரைப்பட கலைஞர்களை திரட்டியும், மற்ற கலைஞர்களை திரட்டியும் போராட்டம் நடத்தினார்.

தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புவதற்காக, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் சீமானை இந்த தேர்தல் நேரத்திலே உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக மக்களுடைய ஆர்வம் மட்டுமல்ல. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் அது தான்’’ என்று தெரிவித்தார்.

‘’தன்னை பகைக்கிறவர்களை உள்ளே தள்ளுவது கலைஞர் வழக்கம்.

இதனால்தான் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் தேர்தல் நேரம் பார்த்து எதற்காக இயக்குநர் சீமான் கைது செய்யப்பட வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பிச் சென்றார்.

நன்றி தமிழ்வின.காம்

Monday, March 30, 2009

இலங்கைத் தமிழர் பிரச்னையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

சென்னை, மார்ச் 30: இலங்கைப் பிரச்னையில் அரசியல் ஆதாயத்திற்காக பாமக மீது முதல்வர் கருணாநிதி வீண் பழி சுமத்துவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை மக்களவைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்; அதுதான் மரபு. ஆனால் அன்றைய தினத்தில் (அக்.17) தில்லியில் இருந்த திமுக எம்.பி.க்களை டி.ஆர்.பாலு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வருகிறார். திமுக தலைவரைச் சந்தித்து அவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சித் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தால் அதன் விளைவு என்ன என்பது யாருக்கும் தெரியாததல்ல.

திமுக எம்.பி.க்கள் முறைப்படி பதவி விலகல் கடிதத்தை அவைத் தலைவரிடம் அன்றைய தினத்தில் அளித்திருந்தால், பாமக எம்.பி.க்களும் அதற்கு அடுத்த நொடியே தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்திருப்பார்கள். ஆனால், முறைப்படி பதவி விலகல் கடிதத்தை அவைத் தலைவரிடம் கொடுக்காமல், அதனை கட்சித் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டது வெறும் நாடகம். அப்படிக் கட்சித் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டதால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது என்று சொல்லிக் கொண்டு, இப்போது பாமக மீது வீண் பழிபோட்டு அரசியல் ஆதாயம் தேட முற்படுவது சரியானதல்ல.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் பக்கத்தில் உள்ள நாடு (இந்தியா) குறுக்கிட்டு என்ன செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்? என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு ""வங்கதேசம் எப்படி வந்தது?'' என்று சூடாகப் பதிலளித்திருக்கிறார் கருணாநிதி.

ஆனால், இன்றைக்கு இந்தியா ஓர் இறையாண்மை மிக்க நாடு. இலங்கையும் இறையாண்மை மிக்க நாடு. எனவே, அந்த நாட்டுப் பிரச்னையில் இந்தியா ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்கிறார்.

இப்படி குழப்பத்தில் உள்ள கருணாநிதி, தேர்தல் வந்ததும் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, பாமக மீதும் மற்ற கட்சிகள் மீதும் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி

Monday, March 23, 2009

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார் கருணாநிதி: ராமதாஸ்

சென்னை, மார்ச் 23: "இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார்'' கருணாநிதி என்று குற்றம்சாட்டினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது.

அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன.

வெறும் மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் கடமையைத் தாமதமின்றி இந்திய அரசு ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், "இலங்கை ஓர் இறையாண்மை மிக்க நாடு, அப்படி இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அழுத்தத்தைக் கொடுக்க முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது'' என்ற ரீதியில் தமிழக முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை என்று இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் தமிழக அரசும், முதல்வரும் கை கழுவி விட்டனர் என்பதையே முதல்வர் கருணாநிதியின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.

இறையாண்மை மிக்க அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை தில்லியில்தான் இருந்தது.

இப்போது, சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்வரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது. ஒரு நாட்டின் இறையாண்மை என்பதில், அந்த நாட்டில் வாழும் எல்லா தரப்பு மக்களையும், பாதுகாப்பதற்கான முதன்மையான பொறுப்பு அடங்கி இருக்கிறது.

இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருக்கிறது. ஒரு நாட்டின் அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக, இனப் படுகொலை செய்யும் நோக்கில் அல்லது வேறு நோக்கில் பெருமளவு உயிரிழப்பு ஏற்படும்போது அல்லது ஏற்படலாம் என்று சந்தேகப்படும்போது, இதர நாடுகளின் போர்ப் படையின் தலையீடும் அவசியமாகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை வகுத்துத் தந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உள்நாட்டுப் போர், கலகம், அடக்குமுறை அல்லது அரசின் தோல்வியின் விளைவாக மக்கள் துன்பப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடு, அதைத் தடுக்க அல்லது தவிர்க்க விரும்பவில்லையானால் அல்லது இயலவில்லையானால் அங்கு தலையிடாமைக் கொள்கை என்பது பாதுகாப்பதற்கான பன்னாட்டுப் பொறுப்புக்கு வழிவிட்டு விலகுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இதுவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாடுகள் தலையிட்டு இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.

இலங்கை அரசின் பொருளாதாரத் தடையினால், ஈழத் தமிழர்கள் பட்டினியால் வாடியபோது, இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி, உணவுப் பொருள்களை விநியோகம் செய்திருக்கிறது.

ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவையெல்லாம், இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான். அப்போதெல்லாம், இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று இந்தியா கருதவில்லை.

ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியா அப்போது செயல்பட்டது. அத்தகைய உணர்வும், துணிச்சலும் இப்போது இந்திய அரசுக்கு வேண்டும்.

அத்தகைய உணர்வை இந்திய அரசு பெறவும், துணிச்சலோடு செயல்படவும் தமிழக அரசும், முதல்வரும் குரல் கொடுக்க வேண்டும். போரை நிறுத்தாவிட்டால் காமன்வெல்த் போன்ற அமைப்புகளில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் இப்போது பிரிட்டனில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: தினமணி

Thursday, March 12, 2009

சீமான், கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்: ப.ம.க. தலைவர் கோ.க.மணி

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய சீமான், கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். பா.ம.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இலங்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் தனியரசு தொடக்க உரையாற்றினார். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அ.தமிழரசு வரவேற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி சிறப்புரை ஆற்றி பேசியதாவது:-

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்கு மனித உரிமைகள் மீறப்படுகிறது. அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இது தடுக்கப்படவேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட ஜப்பான் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

அன்று அன்னிய செலாவணி ஈட்டி கொடுத்தவர்கள் இன்று இலங்கையில் கொல்லப்படுகின்றனர். பாதுகாப்பு வளையம் என்று தமிழர்களை அழைத்து கொலை செய்கின்றனர். இதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் மத்திய அரசு மவுனமாக இருக்கக்கூடாது.

அங்கு போர் நிறுத்தம் ஏற்பட உடனே வழிவகை செய்ய வேண்டும். பட்டினி சாவை தடுக்க சர்வதேச சமுதாயம் உடனே தலையிட வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய சீமான், கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Tuesday, March 10, 2009

தமிழக தமிழர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது

தமிழக தமிழர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது

இலங்கையில் ஆயுத மோதலுக்கு தீர்வு காணாமல் போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க போகிறோம் என்று படையை அனுப்பி வைத்தால் தோல்விதான் ஏற்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை போர் பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டால், அவர்களது உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகளை அழிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.

இதற்கு இந்தியாவின் ஆதரவையும், அமெரிக்காவின் உதவியையும் பாசிச ராஜபக்ச அரசு நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

வன்னிப்பகுதியில் உள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்காவின் தலைமையில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சிவசங்கர் மேனன், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழ் மக்களை அவர்களது பிறந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லுவதும், அவர்களை கட்டாயமாக வெளியேற்ற முற்படுவதும் ஈழத் தமிழர்களின் அரைநூற்றாண்டுகால போராட்டத்தை அவமதிப்பதாகும். தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றி இலங்கை படையினரின் சித்திரவதை முகாம்களில் அடைத்திட முற்படும் எந்த நடவடிக்கைக்கும் இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது.

பாகிஸ்தான் ஒரு பக்கம் பகையாக இருக்கிறது. வங்கதேசம் இன்னொரு பக்கத்தில் பகைமை பாராட்டுகிறது. சீனா எந்த நேரத்திலும் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் இருக்கும் இலங்கையும் தனக்கு பகையாக மாறிவிடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக, இன படுகொலை நடத்தும் ராஜபக்ச அரசுக்கு இந்தியா துணை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலைப்பாடு இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் மிக பெரிய மோசமான தவறாகும்.

ராஜபக்ச அரசின் பாசிச அராஜக நடவடிக்கைகளுக்கு இந்தியா வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ துணை நிற்பதை தமிழ்நாட்டில் இருக்கும் 7 கோடி தமிழர்களும் விரும்பவில்லை. தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது. இந்த உணர்வை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய அரசு தனது கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

முன்பு இந்திரா காந்தி காலத்திலும், அதன்பிறகு ராஜீவ் ஆட்சியின் போது, தொடக்க காலத்திலும் மேற்கொண்ட நிலைப்பாட்டை இந்திய அரசு இப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம் ஆகும். இந்திரா காந்திக்கு இருந்த நம்பிக்கை, அவருக்கு இருந்த துணிச்சல், ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஈடுபாடு இப்போதுள்ள அரசுக்கு வரவேண்டும். இதுவும் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.

போர் பகுதியில் அகப்பட்டிருக்கும் மக்களை மீட்க வேண்டும் என்று இலங்கை அரசு விரிக்கும் வலையில் இந்தியா விழுந்து விடக் கூடாது. இந்த வஞ்சக செயலுக்கு அமெரிக்காவின் துணையையும் இந்தியா நாடக் கூடாது.

அமெரிக்காவும் முன்பு சோமாலியாவில் மேற்கொண்ட முயற்சியை இலங்கையில் மேற்கொள்ள முயலக் கூடாது. ஆயுத மோதலுக்கு தீர்வு காணாமல் மக்களை மட்டும் மீட்க போகிறோம் என்று படையை அனுப்பி வைத்ததால்தான் சோமாலியாவில் தோல்வி ஏற்பட்டது.

இப்போதும் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல், போர் பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களை மட்டும் மீட்க போகிறோம் என்று புறப்பட்டால், சோமாலியாவில் ஏற்பட்ட தோல்விதான் இலங்கையிலும் ஏற்படும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் மறந்துவிடக் கூடாது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

நன்றி: தமிழ்வின.காம்

Monday, March 2, 2009

வன்னியில் 1987ல் செய்ததுபோல வானூர்தி மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும்: ராமதாஸ்

போர் நிறுத்தம் கிடையாது என்று அறிவித்திருக்கும் இலங்கை அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு 1987ஆம் ஆண்டு செய்ததைப் போன்று வானூர்தி மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

போர் நிறுத்தம் கிடையாது என்று அறிவித்திருக்கும் இலங்கை அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போர் முனையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தில்தான் அவர்கள் வசிக்கிறார்கள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, கொடூரத் தாக்குதல் மூலம் தமிழர்களை வெளியேற்றத்துடிக்கும் இலங்கை அரசின் வலையில் இந்தியா சிக்கி விடக் கூடாது.

போர் முனையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை காப்பாற்ற முன்வந்தால், அவர்களை சொந்த பகுதியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. 1987ஆம் ஆண்டு செய்ததைப் போன்று வானூர்தி மூலம் உணவு மற்றும் மருத்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும்.

உலக நாடுகளைப் போல இந்தியாவும், இலங்கை அரசுடனான பொருளாதார உதவிகள் மற்றும் கடன் உதவித்திட்டங்களை கைவிட வேண்டும். இலங்கையுடனான விளையாட்டு உறவுகளை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற தீவிர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டால் மட்டுமே தமிழ் மக்களின் துயர் துடைத்து, அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Tuesday, February 24, 2009

ஈழத்தமிழினத்தின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பே விடுதலைப்புலிகள்: மருத்துவர் இராமதாசு

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பே விடுதலைப்புலிகள் என்று தமிழர்களின் தாயக பகுதியில் நாள்தோறும் தமிழ் மக்களை சிங்கள அரசு அழித்து வருவதைக் கண்டித்தும் வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் இன்று மதுரையில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் பா.ம.க. நிறுவனர் இராமதாசு உரையாற்றினார்.

’ஈழத்தமிழர்களின் தாய்மண்ணில் தற்போது தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பிரச்சினையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கூறி வருகிறது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தமிழர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்த பிரச்சினையில் இலங்கை அரசு என்ன சொல்கிறதோ அதை இந்திய அரசு ஏற்கக்கூடாது.

2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க., பா.ம.க. உட்பட 15 கட்சிகள் கையெழுத்திட்டு இருந்தோம். ஆனால் அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை பிரச்சனை தொடர்பாக நான் டெல்லியில் சோனியாகாந்தியை 35 நிமிடங்கள் சந்தித்து உரையாடினேன். அவர் ஆர்வத்துடனும், இரக்கத்துடனும் இலங்கை தமிழர் பிரச்சினையை கேட்டறிந்தார். அதன் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை சந்திக்கும்படி கூறினார்.

ஆனால் நான் அவரை சந்திப்பதற்கு முன்பே அவர் வெளியிட்ட அறிக்கை 7 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்து விட்டது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக 60 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அதில் 30 ஆண்டுகள் சாத்வீகமாகவும், 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தி.மு.க., பா.ம.க. உட்பட பல கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. இலங்கையுடன் வெளியுறவு கொள்கையை வகுக்கும்போது எங்கள் கருத்துக்களை கேட்காமல் வகுக்கக் கூடாது. தமிழக முதல்வரை கலந்து பேசாமல் இலங்கை தொடர்பான வெளியுறவு கொள்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள கூடாது. ஏனென்றால் ஜனாதிபதி உரைக்கு முரண்பாடாக பிரணாப் முகர்ஜியின் அறிக்கை அடுத்த நாளே அமைந்து விட்டது.

இலங்கையில் தற்போது நாள்தோறும் 100 பேர் வரை பலியாகி வருகிறார்கள். இப்போது நடக்கும் போர் தமிழ் இன அழிப்பு போராகும். இதை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அமைப்புத்தான் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகும். இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பத்தான் காவலர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது. எனவே 27-ந் திகதி போராட்டம் நடத்த மீண்டும் அனுமதி கேட்டு உள்ளோம். இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறினோம். ஆனால் அவர் நாங்கள் நாடகம் ஆடுவதாக கூறுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்காகத்தான் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று தனது உரையில் தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Monday, February 23, 2009

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் நாடகம்: பா.ம.க. நிறுவனர் ச. இராமதாசு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல் துறை தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அப்போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல் துறை மறுத்து விட்டது.

இந்நிலையில் தங்களின் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அந்த இயக்கத்தின் தலைவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அறிவித்தனர்.

அப்போது ராமதாஸ் கூறியதாவது:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதல்வர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலால் கொதித்துப் போயுள்ள வழக்கறிஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும்.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான்.

ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம்.

இலங்கைப் பிரச்னையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் என ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

நன்றி தினமணி (24.02.2009)

Monday, February 16, 2009

இலங்கைப் பிரச்னை: சோனியா தலையிட வேண்டும்- ராமதாஸ்

சென்னை, பிப். 16: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்தியா தலையிடக் கோரி சோனியாவிடம் தமிழ்நாடு காங்கிரஸôர் வற்புறுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், பா.ம.க. நிறுவனர் ராமதாûஸ சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து, இலங்கையில் போரை நிறுத்த உதவ வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோருக்கு கடிதம் எழுதப் போவதாக அண்மையில் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சுதர்சனம் என்னை சந்தித்துப் பேசினார்.

ஹிட்லரை விடவும் கொடுமையான முறையில் ராஜபட்ச அரசு தமிழர்களைக் கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என நமது குடியரசுத் தலைவர் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

இவ்வாறு வேண்டுகோள் விடுத்தால் மட்டும் போதாது. போரை நிறுத்துமாறு இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும். இந்தியா அவ்வாறு கூறினால் இலங்கை நிச்சயம் பணியும்.

மேலும் இலங்கையில் போரை நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆகியவற்றில் இந்தியா முறையிட வேண்டும். அவ்வாறு செய்வதற்கான தார்மிக உரிமை இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா ஐ.நா. சபைக்கு சென்றால் இரண்டே நாளில் போர் நிறுத்தம் ஏற்படும்.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கெனவே போர் நிறுத்தத்துக்கு தயார் என அறிவித்து விட்டனர். இனி இலங்கை அரசுதான் போரை நிறுத்த வேண்டும். அரசாங்கம் போரை நிறுத்தினால், உடனே போரை நிறுத்த விடுதலைப் புலிகளும் தயாராகவே உள்ளனர்.

ஆனால் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனை சரியல்ல. ஆயுதம் ஏந்தி போராடிய எந்த போராளிக் குழுவும் ஆயுதங்களை வீசிவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வந்ததாக வரலாறு இல்லை.

எனவே சண்டையை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என புலிகளை அழைப்பதே சரியானதாக இருக்கும்.

நம் மாபெரும் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட அப்போதைய இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித் மற்றும் நமது வெளியுறவு அமைச்சகத்தின் தவறான அணுகுமுறையே காரணம்.

இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கை இன்றும் தொடர்கிறது. அதனை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய வெளியுறவுத் துறை செயலாளராகவும், வெளிநாட்டு விவகாரங்களில் ராஜீவ் காந்தியின் ஆலோசகராகவும் இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரன் இப்போது பெங்களூரில் உள்ளார்.

இலங்கைப் பிரச்னையில் இந்தியா எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி மத்திய அரசு அவருடன் ஆலோசிக்க வேண்டும்.

இதையெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து விளக்க வேண்டும்.

இதைத்தான் நான் சுதர்சனத்திடம் வலியுறுத்தினேன் என்றார் ராமதாஸ்.

நன்றி: தினமணி

Sunday, February 15, 2009

இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்:டாக்டர் ராமதாஸ் பேட்டி

இலங்கை பிரச்சினை என்பது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை போர் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல் என்றும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்றும் மட்டுமே இந்தியா கருதுகிறது. இந்தியாவின் இந்த கண்ணோட்டத்தில், இந்த பிராந்தியத்தில் மாறி வருகிற சூழ்நிலையை மனதில் கொண்டு தீவிரமான மாற்றம் ஏற்பட வேண்டும். என டாகடர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பகை நாடு பாகிஸ்தான், சீனாவும் நமக்கு பகை நாடு என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நமக்கு நட்பு நாடல்ல. இந்த இரு நாடுகளும் இலங்கையில் இப்போது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. இலங்கை போர்ப்படைக்கு தேவையான கன ரக ஆயுதங்களையும், எறிகணைகள் போன்ற குண்டுகளையும் சீனா வழங்கி வருகிறது. அத்துடன் திருகோணமலையில் சீனாவின் கப்பற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அம்பாந்தோட்டை என்ற இடத்தில் சீனா ஒரு முழு அளவிலான துறைமுகத்தை கட்டிக்கொண்டு வருகிறது. இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டால், அது சீனாவின் பராமரிப்பிலேயே இருந்து வரும்.

அதிபர் ராஜபக்ச தனது இளம் வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். அதுவும் சீனா சார்புடைய கம்யூனிஸ்டு பிரிவைச் சேர்ந்தவர், அவர் பதவிக்கு வந்த நாளிலிருந்து சீனாவுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துக் கொண்டு வருகிறார். இலங்கையுடன் வைத்துள்ள உறவின் மூலம் இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

இன்னொரு புறத்தில் பாகிஸ்தானும், இலங்கைக்கு பெருமளவில் ஆயுத உதவியும், போர் படைபயிற்சியும் அளித்து வருகிறது. இலங்கையைச் சேர்ந்த உளவுப்படையையும் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவுப் படையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் காரணமாக அண்மையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அந்த பயிற்சி அளிக்கப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். இந்த படையினரால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அனல் மின் நிலையம் போன்ற இந்தியாவின் கேந்திரமான இடங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு உருவானால், அது இந்தியாவின் நட்பு நாடாக விளங்கும் சிங்களர்களை விட தமிழர்கள் உண்மையாகவும், நட்புறவு கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். சிங்களர்களை நம்பி இந்தியா ஏமாந்து விடக்கூடாது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்களை செய்வதன் மூலம் இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்வதற்கு இந்திய அரசு முன் வரவேண்டும். இலங்கையில் 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் மிக குறுகிய பகுதியில் தஞ்சம் புகுந்து உணவு, தண்ணீர் இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களெல்லாம் போர்க்கைதிகளை அடைத்து வைக்கும் திறந்த வெளி சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் செய்திகள் வருகின்றன. அந்த திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை நாள் தோறும் கடத்திச் சென்று கொன்று குவிக்கிறார்கள். இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து பின்னர் கொல்லுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகள் தாக்கப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் முல்லைத்தீவு பகுதியிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று இலங்கை அரசு கெடு விதித்து எச்சரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அங்கிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அலுவலர்களை வெளியேற்றக்கூடாது என்றும், அவர்களை அங்கிருந்து திரும்பி அழைக்கக் கூடாது என்றும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்பி வைக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான தந்திகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சென்றடைய வேண்டும். தொலைபேசி, பேக்ஸ், இ-மெயில், தந்தி போன்றவை மூலம் இந்திய வேண்டுகோள்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு, நல்லுறவு, எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்து ஆகியவற்றை மனதில் நிறுத்தி இந்திய அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதாது. போரை நிறுத்து என்று கட்டளையிட வேண்டும். போர் நிறுத்தப்படாவிட்டால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும். நமது போர்ப்படையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள், இந்தியாவைச் சேர்ந்த செயற்கைக்கோள்கள், உளவு விமானங்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களின் உதவியையும் இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் அரசுக்கு விரோதமானவர்கள் என்று கருதும் நபர்களையெல்லாம் இலங்கை போர்ப்படையை சேர்ந்த உளவுப்படையினர் கடத்திச்சென்று படுகொலை செய்து வருவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இதற்காக இராணுவத்தை சேர்ந்த உளவுப்படையினர் வெள்ளைவான் என்ற வாகனத்தை பயன்படுத்தி கடத்திச்சென்று கொன்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரையில் இத்தகைய கடத்தல் மூலம் 8000 முதல் 10000-க்கும் மேற்பட்ட நபர்கள் கடத்தி செல்லப்பட்டு திரும்பி வரவில்லை என்று சொல்கிறார்கள். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள் மற்றும் கொலைகள் இவ்வாறுதான் நடந்துள்ளன.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Friday, February 13, 2009

இலங்கைக்கு செய்து வரும் உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

போரை நிறுத்தாவிட்டால், இலங்கையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு முதலில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் வாயிலாக இந்திய பேரரசு அறிவித்திருக்கிறது.

இலங்கையில், தமிழினப்படுகொலைக்கு காரணமான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய பேரரசு நடவடிக்கை வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கொந்தளித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு இப்போது ஓரளவு பலன் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை காண வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்த ஆறுதலான நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு நிலைப்பாடாக மாற வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு இலங்கை அரசு உடனடியாக செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக இலங்கையில் உள்ள அனைத்து தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்தியா உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

போரை ஊக்கப்படுத்தும் வகையில் எந்த உதவிகளையும் அளிக்க மாட்டோம் என்று எச்சரிப்பதுடன், இதுவரையில் அத்தகைய உதவிகளை அளித்து வந்திருந்தால் அவற்றையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் மருந்து பொருட்களை பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மூலம் வழங்கவும் இந்தியா முன்வரவேண்டும்.

இத்தகைய ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசை பணிய வைக்க முடியும். எனவே, அடுத்த கட்டமாக இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Tuesday, February 10, 2009

17ம் திகதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை மனித சங்கிலி போராட்டம்: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

ஈழத்தமிழர்களை பாதுகாக்கக் கோரி எதிர்வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என இன்று சென்னையில் நடைபெற்ற இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட தமிழின உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஈழத்தமிழர்களை காக்கக்கோரி வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாக்குமரி வரை மனிதசங்கிலி நடத்துவது.

2. மதுரையில் 24ஆம் தேதியும், கோவை, திருச்சி, பாண்டி, சேலம், தூத்துக்குடியில் 19ஆம் தேதி மக்கள் திரள் பேரணி நடத்துவது.

3. ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்து வெளிநாட்டு தூதர்களை சந்தித்து மனு கொடுப்பது.

4. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு இமெயில் அனுப்புவது.

5. ஈழத்தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் மரண சாசனத்தை பல இலட்சம் பிரதிகள் எடுத்தும், சி.டி.யில் பதிவு செய்தும் தமிழகம் முழுவதும் மக்களுக்கு விநியோகம் செய்வது

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் பேசிய இயக்கத் தலைவர்கள், தமிழக மக்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும் தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

நன்றி: தமிழ்வின்.காம் (10.02.2009)

Thursday, January 29, 2009

பிரணாப் -ராஜபக்ஷ சந்திப்பு ஒரு நாடகம்: ராமதாஸ்

சென்னை, ஜன. 28: மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அதிபர் சந்திப்பு ஒரு நாடகம் என பாமக தலைவர் ராமதாஸ் வர்ணித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க முயலும் சிங்கள அரசுக்குத் துணை போய்க் கொண்டிருப்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்று அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

""இலங்கையில் தமிழினம் அழிகிறது; அங்கே உடனடியாக போர் நிறுத்தம் செய்து, புத்தர் உலவிய புனித பூமியில் அமைதி நிலவ ஆவன செய்ய வேண்டும்'' என மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப் பேரவையில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காவிட்டால் அடுத்தது என்ன என்பது குறித்து முதலில் தி.மு.க. தீர்மானிக்கும்; பிறகு அனைத்துக் கட்சிகளுடனோ அல்லது தோழமைக் கட்சிகளுடனோ கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்தப் பின்னணியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்குச் சென்று வந்துள்ளார். புறப்படுவதற்கு முன்பு அவர் முதல்வருடன் தொலைபேசியில் பேசினார் என்றும் முதல்வர் கூறியதைத் தொடர்ந்துதான் தாம் கொழும்பு செல்ல இருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறியதாக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஏமாற்றம்: ஆனால், தங்களுடைய அழைப்பின் பேரில்தான் அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இத்தனை குழப்பங்களுடன் அரங்கேறியிருக்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழர்களைப் பொருத்தவரை பெரும் ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது.

ஏனெனில் இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறி வருவதற்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இதன் மூலம் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அதிபரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசவே இல்லை என்பது தெளிவாகிறது. தமிழர்களைப் பாதுகாப்பதாக மட்டும் இலங்கை அதிபர் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு வர அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றிருக்கத் தேவை இல்லை.

"இன்றே போர் நிறுத்தம்; நாளை பேச்சு; அடுத்து அமைதியான வாழ்வு; இதற்கு நடவடிக்கை எடுங்கள்' என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டப் பேரவைக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அவமானம் இது.

தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஆகியோரை இலங்கைக்கு வருமாறு இலங்கை அதிபர் விடுத்த அழைப்பை உரியவர்களிடம் தெரிவிப்பதாக அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நடக்கட்டும் நாடகம் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

தனி மனித வாழ்க்கையின் அத்தனை சுதந்திரங்களையும் இழந்து விட்டு தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கையில் தமிழர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இதற்காக வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் இலங்கையில் நமது தமிழ் இனமே இல்லை என்றாகிவிடும். எனவே தமிழினத்தைக் காக்க தமிழர்கள் அனைவரும் வேறுபாடுகளை தூக்கி எறிந்துவிட்டு சிங்கள அரசுக்கும் அதற்குத் துணை போவோருக்கும் எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி

Monday, January 26, 2009

தமிழீழத்தை அங்கீகரிக்கும்படி மத்திய அரசை தமிழக அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும்: இராமதாஸ் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் இராமதாஸ் அளித்த பேட்டியின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக முதலமைச்சர் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இருக்கிறதே என்று பேசினார்.

மத்திய அரசாங்கத்தை நீங்கள் நிர்ப்பந்தம் செய்து போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெப்ரவரி 15 ஆம் நாள், தி.மு.க. பொதுக்குழு கூட்டி முடிவெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.

இடைப்பட்ட 3 வாரத்தில் இலங்கையில் தமிழர்கள் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாக போகிறார்களோ? ஏன் இந்த தாமதம். கலைஞர் உடனடியாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். நமது வேண்டுகோள் வேறு விதமாக இருக்க வேண்டும்.

மத்திய அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு பதிலாக ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

இது தி.மு.க.விற்கு புதிதல்ல. தனி ஈழம் தான் இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு என்று ஏற்கனவே தி.மு.க. அறிவித்து பல மாநாடுகள், பேரணிகள், நடத்தி இருக்கிறது. அந்த பழைய நிலைப்பாட்டையே தி.மு.க. மீண்டும் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கிற தீர்வு கிடைக்கும்.

இத்தகைய முடிவை தான் தி.மு.க. பொதுக்குழுவிலும் மேற்கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட இலங்கையில் அந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்குட்பட்ட தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

ஏனெனில் இலங்கை அரசியல் சட்டத்தில் மாநிலங்களை கொண்ட கூட்டாட்சி என்பது இடம் பெறவில்லை. 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை சிங்களவர்கள் ஒருவர் கூட ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

தமிழர்களுக்கு சிறிதளவாவது அதிகாரம் வழங்கலாம் என்ற வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்ட போதெல்லாம் அடுத்து வந்த ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது.

எனவே ஒன்றுப்பட்ட இலங்கையில் அந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமற்றது.

இப்படி கூறுகின்ற அமைப்புகளோடு நேருக்குநேர் விவாதிக்க தயார். இதர கட்சிகளும் இதனை உணர வேண்டும். இலங்கை ஒரு வித்தியாசமான நாடு அந்த நாட்டின் வரலாற்றை புரட்டி பார்த்தால் தனி ஈழம் கோரிக்கை நியாயமானது என்பது தெரியவரும்.

இந்தியாவில் வேறொரு இனத்தை சேர்ந்தவர்கள் அண்டை நாட்டில் பாதிக்கப்பட்டால் இந்தியா தலையிட்டு தனி நாடு உருவாக்கி தந்திருக்கும். உதாரணத்திற்கு கிழக்கு பாகிஸ்தான் பகுதியை வங்காள தேசம் என்ற நாடு உருவாக இந்திய தான் காரணம்.

எனவே அந்த நிலையை எடுக்க தமிழகத்தில் உள்ள கட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். இதற்கு தமிழர்கள் முழு ஆதரவு தரவேண்டும் என்றார் அவர்.
நன்றி: புதினம்.காம்

Tuesday, January 20, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமை தாங்கினார்.

இலங்கையில் போரை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசியதாவது:

கிளிநொச்சி வீழ்ந்து விட்டது. இத்தோடு இலங்கை தமிழ் இனம் முடிந்து விட்டது என சிலர் மமதையோடு பேசுகிறார்கள். இதை உணர்வுள்ள தமிழர்கள் நம்பவில்லை. தமிழர்கள் வீழ்ச்சி அடைய மாட்டார்கள்.

சிங்களவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் வெற்றி பெற வேண்டும் என்று ஏழு கோடி தமிழர்களும் நினைக்கிறார்கள். இதுதான் இன உணர்வு, மொழி உணர்வு. இலங்கை தமிழர்கள் சம உரிமைக்காக போராடி வருகிறார்கள். அவர்கள் அந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள். இது 50 ஆண்டு கால போராட்டம்.

தமிழர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் போன்றோர் தெரிந்து வைத்திருந்தார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர அனைத்து கட்சிகள் சார்பில் பிரதமரை சந்தித்தோம். அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

பிரணாப் முகர்ஜி சிறிலங்காவுக்கு செல்ல வேண்டியதில்லை. போரை நிறுத்துங்கள் என்று தொலைபேசியில் சொன்னால் போதும். சண்டை முடிவுக்கு வரவேண்டும் என்ற மனநிலை இருந்தாலே போதும்.

வன்முறை கூடாது, அறவழி போராட்டம் நடத்த வேண்டும் என்றுதான் எங்கள் கட்சியினருக்கு பாடம் நடத்துகிறோம். மறைமலை நகரில் பேசும்போது தமிழக மக்கள் 10 நாள் தொடர் போராட்டம் நடத்த வேண்டும் என்று தனிபட்ட முறையில் கருத்து கூறினேன்.

அதற்காக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். 5 ஆண்டு காலம் இந்த ஆதரவு கொடுப்போம்.

அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று கேட்டோம். "நான் உண்ணாநிலை இருக்கவா' என்று கருணாநிதி கேட்டார். வயது, உடல்நிலை கருதி நாங்கள் அதை ஏற்கவில்லை. திருமாவளவன் உண்ணாநிலையும் எங்கள் போராட்டமும் நாங்கள் எடுத்த முடிவு.

இந்த சூழ்நிலையில் இலங்கை பிரச்சினை திசை மாறும் வகையில் செல்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். எந்த கட்சியுடன் கூட்டணி. அந்த கட்சியுடன் சேரமாட்டேன். ஓட்டும் இல்லை. உறவும் இல்லை என்று ஒரு கட்சி மற்ற கட்சியை திட்டுவது நல்லதல்ல. உண்ணாநிலையின் போது இதை நான் அப்போதே கண்டித்து இருக்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக மாணவ- மாணவிகள் ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைவரும் ஒன்றுபட தயாராக இருக்க வேண்டும் என்றார் மருத்துவர் இராமதாஸ்.

நன்றி புதினம்.காம்

Sunday, January 18, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தமிழகத்தை செயலிழக்கும் 10 நாள் தொடர் போராட்டம்: மருத்துவர் இராமதாஸ் அறிவிப்பு


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காக தமிழகமே செயலிழக்கும் அளவில் 10 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்து வைத்து இராமதாஸ் ஆற்றிய உரையின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:


இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், "இன்று போய் நாளை வா'' என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்துவிட்டுத்தான் செல்வேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும்.

இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதல்மைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.

தமிழன் என்றால், மத்திய அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை என்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சமாதி கட்டி இருப்பார்கள். இந்த கருத்துக்கு மறுப்பு யாராவது தெரிவித்தால், அவர்கள் சென்னையில் மேடை போட்டு சொல்லட்டும். அதில் நானும், திருமாவளவனும் பேசுவோம்.

இதே மறைமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் கறுப்புச் சட்டை அணிந்து 1,000 தீபங்கள் ஏற்றினோம். 7 கோடி தமிழர்களும் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி, இலங்கை தமிழர்களை காக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Monday, January 12, 2009

அரசியல் தீர்வு என்ன என்பதை இலங்கை அரசு தெளிவுபடுத்த வேண்டும்-மருத்துவர் இராமதாசு

சென்னை, ஜன.13-இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய அரசியல் தீர்வு என்ன என்பதை இலங்கை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கருணாநிதியுடன் சந்திப்பு
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து அறிக்கை ஒன்றை அளித்து பேசினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பிற்கு பின், டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் வெளியே வந்தனர். முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-போர் நிறுத்தம்

இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது ராணுவம் குண்டு மழை பொழிகிறது. தமிழர்கள் அங்கே அழிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் போரை தடுக்க வேண்டிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினோம்.


ஏற்கனவே, இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி எடுத்த முயற்சிக்கு மத்திய அரசு எந்த மரியாதையும் தரவில்லை. இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா, நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகளும் வலியுறுத்துகின்றன.

அறிக்கை வெளியிடுங்கள்
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியும் இதையே வலியுறுத்தியுள்ளார். 7 கோடி தமிழர்களின் முடிவை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவர சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் பேசி, அது தொடர்பான அறிக்கையும் வெளியிடுங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கூறியுள்ளோம். முதல்-அமைச்சர் கருணாநிதியும் உடனே பேசுவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வு வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்துகிறது. இலங்கை அரசும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், என்ன அரசியல் தீர்வு என்பதை இலங்கை அரசு இதுவரை சொல்லவில்லை. அதை உடனே தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-
இலங்கையில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்று, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். யாரையோ எதிர்கிறோம் என்று அங்குள்ள தமிழர்களை எதிர்க்கிறார்கள். தமிழர்கள் அங்கே அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அங்கே போர் நிறுத்தம் வேண்டும். தமிழர்கள் பாதுகாப்புதான் நிரந்தரம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
இலங்கையில் வாழும் தமிழர்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற இந்திய அரசு தவறினால், அது காங்கிரசுக்கு வரக்கூடிய தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் எடுத்து சொன்னோம். அவரும், மத்திய அரசிடம் எடுத்துரைப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி: தினத்தந்தி

Monday, January 5, 2009

தமிழர்களையும் தமிழக சட்டமன்றத்தையும் இந்திய அரசு அவமானப்படுத்தி விட்டது: மருத்துவர் இராமதாசு

சென்னையில் நேற்று ஊடகவியலாளர்களை மருத்துவர் இராமதாசு சந்தித்தார். இச்சந்திப்பின்போது “நாங்கள் எங்கள் சுயமரியாதையை இழந்து இருக்கிறோம். வெட்கத்தால் தலை குனிகிறோம்.” என குறிப்பிட்டார்.

“இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும், இந்திய அரசு தலையிட்டு அமைதி தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டு முறை தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

38 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்தியிருக்கிறோம். மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரத போராட்டம் என்று எத்தனையோ வழிகளில் போராடியிருக்கிறோம். ஆனாலும் இந்திய ஆட்சியாளர்களின் மனமிரங்கவில்லை.

தமிழர்களையும், தமிழ் மக்களையும், தமிழக சட்டமன்றத்தையும் இந்திய அரசு அவமானப்படுத்தி விட்டது.

இலங்கை பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதால் முதல்-அமைச்சர் தலைமையில் பிரதமரை சென்று சந்தித்தோம். அதன் பின் பல போராட்டங்கள். ஆனால் இப்போது முதல்-அமைச்சர் கருணாநிதி மவுனமாகவே இருக்கிறார்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். எங்கள் கட்சியை பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமோ, வன்முறை இயக்கமோ அல்ல. அது விடுதலைக்காக போராடும் போராட்ட இயக்கம்.

இந்திய அரசில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள், அதிகாரிகள் இலங்கை தமிழர்கள் அழிய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதனால் அவர்கள் இலங்கை பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட தடையாக இருக்கின்றனர்.

இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலை குறித்து அறிவிப்போம்.

என மருத்துவர் இராமதாசு மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையில் போரை நிறுத்த, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியை பிடித்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ஒரு நகரை வீழ்த்தியதை வைத்து, விடுதலை போராட்ட முடிவு நிர்ணயம் செய்யப்படுவது இல்லை.

நகரம் வீழ்ந்தாலும் தொடர்ந்து விடுதலை போராட்டம் நடக்கும் என்பதை சரித்திரம் நமக்கு சொல்லி இருக்கிறது. கிளிநொச்சியில் சிங்கள ராணுவம் நுழைந்தாலும் 5 லட்சம் தமிழர்களின் விடுதலை போராட்டம் தொடரத்தான் செய்யும். சிங்களர்களை போல் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்வரை போராட்டம் தொடரும்.

இந்த நிலையில் 7 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தை உள்ளடக்கிய மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பதை அறிவித்து செயல்பட போகிறது என்பதை அறிய வேண்டிய நேரம் இது. போரை நிறுத்தும்படி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தும், முதல்-அமைச்சர் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்த பிறகும் எதுவும் நடக்கவில்லை.

பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முடியும் என்று பிரதமரும், வெளியுறவு துறை மந்திரியும் தாக்கல் செய்த அறிக்கை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால், தமிழகத்தில் சட்டபேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், ஆர்ப்பாட்டங்கள், முதல்-அமைச்சர் தலைமையிலான குழு சந்திப்புக்கு பின்னரும், இதுவரை மத்திய அரசு போரை நிறுத்தும்படி ஒரு வார்த்தை கூட இலங்கை அரசிடம் சொல்லவில்லை.

போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசு சொல்லாது என்று இந்திய மண்ணிலேயே ராஜபக்சே சொல்லிவிட்டு சென்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அரசியல் கோமாளிகள் என்று ராணுவ தளபதி குறிப்பிட்டார். மத்திய அரசில் உள்ள குழுவினர் கூட பிரதமரிடமும், கருணையும், மனிதாபிமானமும் நிறைந்த சோனியா அம்மையாரிடமும் இந்த பிரச்சினையை சரியாக எடுத்து சொல்ல தவறி விட்டார்கள்.

இதன் பின்னர் தமிழக மக்கள், முதல்-அமைச்சர், அரசியல் கட்சிகள் போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்தும் அது நடைபெறவில்லை. இந்த அவமானத்தால் நாங்கள் தலை குனிந்து நிற்கிறோம்.

இலங்கை எப்போதும் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்தது இல்லை. இனிமேல் இருக்க போவதும் இல்லை. இலங்கை நாடு பகை நாடுகளுக்கு தளமாக போகிறது. இந்த ஆபத்தை உணர்ந்து இந்திய அரசு அவர்களை அடக்கி வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இலங்கையை பொறுத்தவரை இந்திய அரசின் வெளியுறவு கொள்கை மாற்றப்பட வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களின் விருப்பம்.

கிளிநொச்சியை அடுத்து இலங்கை படையின் மூர்க்கத்தனமான தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு திரும்பி உள்ளது. போர் விமானம் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி தாக்குவதாக இன்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியா எதுவரை காத்திருக்க போகிறது, எதுவரை அமைதியாக இருக்க போகிறது என்று தமிழக மக்களின் உள்ளங்களில் கேள்விகள் எழுந்து உள்ளன.

தமிழக அரசு என்ன செய்ய போகிறது, முதல்-அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். அடர்த்தியாக மக்கள் வாழும் முல்லைத்தீவு அழிந்து போகட்டும், வீடு வாசல்களை இழந்து தமிழர்கள் உணவு, மருந்து பொருட்கள் கிடைக்காமல் செத்து மடியட்டும் என்று விட்டுவிட போகிறோமா?

தமிழர்களுக்காக என்று கூட வேண்டாம், ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது மத்திய அரசு தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், முதல்-அமைச்சரும் இதுபற்றி உடனடியாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தரவேண்டும். என டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நன்றி: தினத்தந்தி

Sunday, January 4, 2009

தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் முக்கியமா?: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் முக்கியமா?: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

சட்டத்துக்கு கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களை விடவும், கொழும்பில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் மத்திய அரசின் அதிகாரிகளுக்கு முக்கியமானவர்களா?'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதமூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

"இலங்கைச் சிக்கல் - இந்திய அரசு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் அமைந்த அறிக்கை ஒன்றை உங்களிடம் அளித்தேன். ஒரு மாதம் கடந்துவிட்டது. அதில் உள்ள யோசனைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.

கடலுக்கு அப்பால் தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதைத் தடுக்க ஏதும் செய்ய முடியாமல் இங்குள்ள 6 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். அடக்குமுறையைக் கையாளும் கொழும்பு அதிகாரிகளுடன் டில்லியில் உள்ள சில அதிகாரிகள் கூட்டாகச் செயல்படுகின்றனர்.

டில்லியிடம் "சலுகைகளுக்காக' எப்போதும் கெஞ்சி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு தமிழர்களைக் குறுக்கிவிட முடியாது.

கடந்த அக்டோபரில் தமிழகச் சட்டப்பேரவை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா, கே.பி.எஸ்.மேனன், தாக்கூர் அடங்கிய உயர்நிலைக் குழு கொழும்பு சென்றது.

இந்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள் கூறுவதைச் செவிமடுக்காது, போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது என்று பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டது. டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே இரகசிய உடன்பாடு இல்லை என்றால் இது நடந்திருக்காது.

நான் உங்களிடம் அளித்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளபடி, நேரடியாக இல்லை என்றாலும், மறைமுகமாக ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மூலமாக நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம்.

இலங்கையில் இந்தியர்கள் கொல்லப்படுவதை, இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

திட்டம் தீட்டுதல், கொள்கைகளை உருவாக்குதல் பொறுப்பில் டில்லியில் இருக்கும் அதிகாரிகளுக்கு, சட்டத்துக்கு கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களை விடவும், கொழும்பில் உள்ள போர் வெறியர்களும் இனப்படுகொலை வெறியர்களும்தான் மிகவும் முக்கியமானவர்களா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கௌரவம், சுயமரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? இதையே இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?

காலம் கடப்பதற்கு முன்பு தமிழக மக்களுக்கு நீங்கள் பதில் தெரிவிக்க வேண்டும். இவ் விஷயத்தில் நீங்கள் அவசர உணர்வுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்' என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

நன்றி: தமிழ்விண்.காம்