Sunday, February 15, 2009

இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்:டாக்டர் ராமதாஸ் பேட்டி

இலங்கை பிரச்சினை என்பது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை போர் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல் என்றும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்றும் மட்டுமே இந்தியா கருதுகிறது. இந்தியாவின் இந்த கண்ணோட்டத்தில், இந்த பிராந்தியத்தில் மாறி வருகிற சூழ்நிலையை மனதில் கொண்டு தீவிரமான மாற்றம் ஏற்பட வேண்டும். என டாகடர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பகை நாடு பாகிஸ்தான், சீனாவும் நமக்கு பகை நாடு என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நமக்கு நட்பு நாடல்ல. இந்த இரு நாடுகளும் இலங்கையில் இப்போது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. இலங்கை போர்ப்படைக்கு தேவையான கன ரக ஆயுதங்களையும், எறிகணைகள் போன்ற குண்டுகளையும் சீனா வழங்கி வருகிறது. அத்துடன் திருகோணமலையில் சீனாவின் கப்பற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அம்பாந்தோட்டை என்ற இடத்தில் சீனா ஒரு முழு அளவிலான துறைமுகத்தை கட்டிக்கொண்டு வருகிறது. இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டால், அது சீனாவின் பராமரிப்பிலேயே இருந்து வரும்.

அதிபர் ராஜபக்ச தனது இளம் வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். அதுவும் சீனா சார்புடைய கம்யூனிஸ்டு பிரிவைச் சேர்ந்தவர், அவர் பதவிக்கு வந்த நாளிலிருந்து சீனாவுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துக் கொண்டு வருகிறார். இலங்கையுடன் வைத்துள்ள உறவின் மூலம் இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.

இன்னொரு புறத்தில் பாகிஸ்தானும், இலங்கைக்கு பெருமளவில் ஆயுத உதவியும், போர் படைபயிற்சியும் அளித்து வருகிறது. இலங்கையைச் சேர்ந்த உளவுப்படையையும் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவுப் படையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் காரணமாக அண்மையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அந்த பயிற்சி அளிக்கப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். இந்த படையினரால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அனல் மின் நிலையம் போன்ற இந்தியாவின் கேந்திரமான இடங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு உருவானால், அது இந்தியாவின் நட்பு நாடாக விளங்கும் சிங்களர்களை விட தமிழர்கள் உண்மையாகவும், நட்புறவு கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். சிங்களர்களை நம்பி இந்தியா ஏமாந்து விடக்கூடாது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்களை செய்வதன் மூலம் இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்வதற்கு இந்திய அரசு முன் வரவேண்டும். இலங்கையில் 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் மிக குறுகிய பகுதியில் தஞ்சம் புகுந்து உணவு, தண்ணீர் இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களெல்லாம் போர்க்கைதிகளை அடைத்து வைக்கும் திறந்த வெளி சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் செய்திகள் வருகின்றன. அந்த திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை நாள் தோறும் கடத்திச் சென்று கொன்று குவிக்கிறார்கள். இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து பின்னர் கொல்லுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகள் தாக்கப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் முல்லைத்தீவு பகுதியிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று இலங்கை அரசு கெடு விதித்து எச்சரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அங்கிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அலுவலர்களை வெளியேற்றக்கூடாது என்றும், அவர்களை அங்கிருந்து திரும்பி அழைக்கக் கூடாது என்றும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்பி வைக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான தந்திகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சென்றடைய வேண்டும். தொலைபேசி, பேக்ஸ், இ-மெயில், தந்தி போன்றவை மூலம் இந்திய வேண்டுகோள்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு, நல்லுறவு, எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்து ஆகியவற்றை மனதில் நிறுத்தி இந்திய அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதாது. போரை நிறுத்து என்று கட்டளையிட வேண்டும். போர் நிறுத்தப்படாவிட்டால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும். நமது போர்ப்படையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள், இந்தியாவைச் சேர்ந்த செயற்கைக்கோள்கள், உளவு விமானங்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களின் உதவியையும் இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் அரசுக்கு விரோதமானவர்கள் என்று கருதும் நபர்களையெல்லாம் இலங்கை போர்ப்படையை சேர்ந்த உளவுப்படையினர் கடத்திச்சென்று படுகொலை செய்து வருவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இதற்காக இராணுவத்தை சேர்ந்த உளவுப்படையினர் வெள்ளைவான் என்ற வாகனத்தை பயன்படுத்தி கடத்திச்சென்று கொன்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரையில் இத்தகைய கடத்தல் மூலம் 8000 முதல் 10000-க்கும் மேற்பட்ட நபர்கள் கடத்தி செல்லப்பட்டு திரும்பி வரவில்லை என்று சொல்கிறார்கள். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள் மற்றும் கொலைகள் இவ்வாறுதான் நடந்துள்ளன.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்

No comments: