Sunday, January 4, 2009

தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் முக்கியமா?: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் முக்கியமா?: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

சட்டத்துக்கு கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களை விடவும், கொழும்பில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் மத்திய அரசின் அதிகாரிகளுக்கு முக்கியமானவர்களா?'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதமூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

"இலங்கைச் சிக்கல் - இந்திய அரசு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் அமைந்த அறிக்கை ஒன்றை உங்களிடம் அளித்தேன். ஒரு மாதம் கடந்துவிட்டது. அதில் உள்ள யோசனைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.

கடலுக்கு அப்பால் தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதைத் தடுக்க ஏதும் செய்ய முடியாமல் இங்குள்ள 6 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். அடக்குமுறையைக் கையாளும் கொழும்பு அதிகாரிகளுடன் டில்லியில் உள்ள சில அதிகாரிகள் கூட்டாகச் செயல்படுகின்றனர்.

டில்லியிடம் "சலுகைகளுக்காக' எப்போதும் கெஞ்சி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு தமிழர்களைக் குறுக்கிவிட முடியாது.

கடந்த அக்டோபரில் தமிழகச் சட்டப்பேரவை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா, கே.பி.எஸ்.மேனன், தாக்கூர் அடங்கிய உயர்நிலைக் குழு கொழும்பு சென்றது.

இந்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள் கூறுவதைச் செவிமடுக்காது, போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது என்று பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டது. டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே இரகசிய உடன்பாடு இல்லை என்றால் இது நடந்திருக்காது.

நான் உங்களிடம் அளித்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளபடி, நேரடியாக இல்லை என்றாலும், மறைமுகமாக ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மூலமாக நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம்.

இலங்கையில் இந்தியர்கள் கொல்லப்படுவதை, இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

திட்டம் தீட்டுதல், கொள்கைகளை உருவாக்குதல் பொறுப்பில் டில்லியில் இருக்கும் அதிகாரிகளுக்கு, சட்டத்துக்கு கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களை விடவும், கொழும்பில் உள்ள போர் வெறியர்களும் இனப்படுகொலை வெறியர்களும்தான் மிகவும் முக்கியமானவர்களா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கௌரவம், சுயமரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? இதையே இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?

காலம் கடப்பதற்கு முன்பு தமிழக மக்களுக்கு நீங்கள் பதில் தெரிவிக்க வேண்டும். இவ் விஷயத்தில் நீங்கள் அவசர உணர்வுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்' என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

நன்றி: தமிழ்விண்.காம்

1 comment:

Anonymous said...

தமிழகத்திற்கு வரும் மன்மோகனுக்குச் செருப்பு வரவேற்பு தருவதுதான் சரியான
பதிலாகும்.மேலும் ராணுவ அதிகாரிகளை அனுப்பிக் கொண்டே
பொய் சொல்லட்டும்.