Thursday, January 29, 2009

பிரணாப் -ராஜபக்ஷ சந்திப்பு ஒரு நாடகம்: ராமதாஸ்

சென்னை, ஜன. 28: மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அதிபர் சந்திப்பு ஒரு நாடகம் என பாமக தலைவர் ராமதாஸ் வர்ணித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க முயலும் சிங்கள அரசுக்குத் துணை போய்க் கொண்டிருப்பவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்று அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

""இலங்கையில் தமிழினம் அழிகிறது; அங்கே உடனடியாக போர் நிறுத்தம் செய்து, புத்தர் உலவிய புனித பூமியில் அமைதி நிலவ ஆவன செய்ய வேண்டும்'' என மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப் பேரவையில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காவிட்டால் அடுத்தது என்ன என்பது குறித்து முதலில் தி.மு.க. தீர்மானிக்கும்; பிறகு அனைத்துக் கட்சிகளுடனோ அல்லது தோழமைக் கட்சிகளுடனோ கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்தப் பின்னணியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்குச் சென்று வந்துள்ளார். புறப்படுவதற்கு முன்பு அவர் முதல்வருடன் தொலைபேசியில் பேசினார் என்றும் முதல்வர் கூறியதைத் தொடர்ந்துதான் தாம் கொழும்பு செல்ல இருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறியதாக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஏமாற்றம்: ஆனால், தங்களுடைய அழைப்பின் பேரில்தான் அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இத்தனை குழப்பங்களுடன் அரங்கேறியிருக்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழர்களைப் பொருத்தவரை பெரும் ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது.

ஏனெனில் இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறி வருவதற்கும் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

இதன் மூலம் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அதிபரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசவே இல்லை என்பது தெளிவாகிறது. தமிழர்களைப் பாதுகாப்பதாக மட்டும் இலங்கை அதிபர் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு வர அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றிருக்கத் தேவை இல்லை.

"இன்றே போர் நிறுத்தம்; நாளை பேச்சு; அடுத்து அமைதியான வாழ்வு; இதற்கு நடவடிக்கை எடுங்கள்' என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டப் பேரவைக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அவமானம் இது.

தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஆகியோரை இலங்கைக்கு வருமாறு இலங்கை அதிபர் விடுத்த அழைப்பை உரியவர்களிடம் தெரிவிப்பதாக அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நடக்கட்டும் நாடகம் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

தனி மனித வாழ்க்கையின் அத்தனை சுதந்திரங்களையும் இழந்து விட்டு தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக இலங்கையில் தமிழர்கள் தண்டிக்கப்படுகின்றனர். இதற்காக வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் இலங்கையில் நமது தமிழ் இனமே இல்லை என்றாகிவிடும். எனவே தமிழினத்தைக் காக்க தமிழர்கள் அனைவரும் வேறுபாடுகளை தூக்கி எறிந்துவிட்டு சிங்கள அரசுக்கும் அதற்குத் துணை போவோருக்கும் எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி

2 comments:

குழலி / Kuzhali said...

மருத்துவர் அய்யா சொல்லிட்டாரு இது ஒரு நாடகம் என்று! அதை நாடகம் என்று சொன்னாரே இது இதுக்கு பேரு என்னங்க?

மத்தியில் அரசு அதிகாரத்தில் பங்கெடுத்துக்கொண்டே இந்த பக்கம் வெற்று அறிக்கைகளும், வாய்வீச்சுகளும் மருத்துவர் அய்யா செய்து கொண்டே இருந்தால் அட நான் சொல்லலைன்னாலும் மற்றவங்க சொல்லதானே செய்வாங்க... நல்லா போடுறாருய்யா நாடகமென்று....

அரியாங்குப்பத்தார் said...

நியாயமான உணர்வு...

தமிழினத்திற்கு போராடுகிறவர்களாக இருந்தாலும்... அவர்கள் செய்யத்தவறியதையும் சுட்டிக்காட்ட வேண்டும்...

நடுவண் அரசிலிருந்து பா.ம.க. விலகவேண்டியது அவசியம்...