Tuesday, January 20, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம்

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமை தாங்கினார்.

இலங்கையில் போரை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசியதாவது:

கிளிநொச்சி வீழ்ந்து விட்டது. இத்தோடு இலங்கை தமிழ் இனம் முடிந்து விட்டது என சிலர் மமதையோடு பேசுகிறார்கள். இதை உணர்வுள்ள தமிழர்கள் நம்பவில்லை. தமிழர்கள் வீழ்ச்சி அடைய மாட்டார்கள்.

சிங்களவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் வெற்றி பெற வேண்டும் என்று ஏழு கோடி தமிழர்களும் நினைக்கிறார்கள். இதுதான் இன உணர்வு, மொழி உணர்வு. இலங்கை தமிழர்கள் சம உரிமைக்காக போராடி வருகிறார்கள். அவர்கள் அந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள். இது 50 ஆண்டு கால போராட்டம்.

தமிழர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய் போன்றோர் தெரிந்து வைத்திருந்தார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர அனைத்து கட்சிகள் சார்பில் பிரதமரை சந்தித்தோம். அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

பிரணாப் முகர்ஜி சிறிலங்காவுக்கு செல்ல வேண்டியதில்லை. போரை நிறுத்துங்கள் என்று தொலைபேசியில் சொன்னால் போதும். சண்டை முடிவுக்கு வரவேண்டும் என்ற மனநிலை இருந்தாலே போதும்.

வன்முறை கூடாது, அறவழி போராட்டம் நடத்த வேண்டும் என்றுதான் எங்கள் கட்சியினருக்கு பாடம் நடத்துகிறோம். மறைமலை நகரில் பேசும்போது தமிழக மக்கள் 10 நாள் தொடர் போராட்டம் நடத்த வேண்டும் என்று தனிபட்ட முறையில் கருத்து கூறினேன்.

அதற்காக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம். 5 ஆண்டு காலம் இந்த ஆதரவு கொடுப்போம்.

அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று கேட்டோம். "நான் உண்ணாநிலை இருக்கவா' என்று கருணாநிதி கேட்டார். வயது, உடல்நிலை கருதி நாங்கள் அதை ஏற்கவில்லை. திருமாவளவன் உண்ணாநிலையும் எங்கள் போராட்டமும் நாங்கள் எடுத்த முடிவு.

இந்த சூழ்நிலையில் இலங்கை பிரச்சினை திசை மாறும் வகையில் செல்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். எந்த கட்சியுடன் கூட்டணி. அந்த கட்சியுடன் சேரமாட்டேன். ஓட்டும் இல்லை. உறவும் இல்லை என்று ஒரு கட்சி மற்ற கட்சியை திட்டுவது நல்லதல்ல. உண்ணாநிலையின் போது இதை நான் அப்போதே கண்டித்து இருக்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக மாணவ- மாணவிகள் ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைவரும் ஒன்றுபட தயாராக இருக்க வேண்டும் என்றார் மருத்துவர் இராமதாஸ்.

நன்றி புதினம்.காம்

No comments: