Thursday, March 12, 2009

சீமான், கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்: ப.ம.க. தலைவர் கோ.க.மணி

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய சீமான், கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். பா.ம.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இலங்கை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் தனியரசு தொடக்க உரையாற்றினார். பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அ.தமிழரசு வரவேற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே. மணி சிறப்புரை ஆற்றி பேசியதாவது:-

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். அங்கு மனித உரிமைகள் மீறப்படுகிறது. அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இது தடுக்கப்படவேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட ஜப்பான் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

அன்று அன்னிய செலாவணி ஈட்டி கொடுத்தவர்கள் இன்று இலங்கையில் கொல்லப்படுகின்றனர். பாதுகாப்பு வளையம் என்று தமிழர்களை அழைத்து கொலை செய்கின்றனர். இதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் மத்திய அரசு மவுனமாக இருக்கக்கூடாது.

அங்கு போர் நிறுத்தம் ஏற்பட உடனே வழிவகை செய்ய வேண்டும். பட்டினி சாவை தடுக்க சர்வதேச சமுதாயம் உடனே தலையிட வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய சீமான், கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தமிழ்வின்.காம்

No comments: