Friday, September 19, 2008

சாதனைகள் அல்ல; வேதனைகள்-மருத்துவர் இராமதாசு

கருணாநிதி, தனது ஆட்சியில் சாதித்துள்ளதாக போடப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்துள்ள பட்டியல்கள் சாதனைகள் அல்ல; வேதனைகள் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறினார்

மேலும், ரூ. 1 அரிசித் திட்டம், ரூ. 50 மளிகை திட்டம் ஆகியவை மோசடித் திட்டங்கள் என்றும் அவர் கூறினார்

தமிழக அரசின் சாதனைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள், தோல்வி அடைந்த திட்டங்கள் ஆகியவற்றை எல்லாம் போட்டு தமிழக அரசின் சாதனைகள் என்று பட்டியல் வெளியிட்டுள்ளனர்.

குடிசை மாற்று வாரியம் ஆரம்பிக்கப்பட்டு 38 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சென்னையைக் கூட குடிசை இல்லாத நகரமாக மாற்ற முடியவில்லை.

துப்புரவு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அளித்த நிதி ரூ.54 கோடி திருப்பி அனுப்பப்பட்டதாக புதுதில்லியில் இருந்த வந்த அதிகாரி தெரிவிக்கிறார். ஆனால் கருணாநிதி ரூ.42 கோடிதான் செலவு செய்யப்படவில்லை என்கிறார்.

உடல் ஊனமுற்றோருக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு 11 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்கள் வெளியிட்டுள்ள பட்டியல்கள் சாதனை அல்ல வேதனை.

விலை உயர்வை கட்டுப்படுத்துகிறோம் என்று கூறிக் கொண்டு ரூ.1 விலையில் அரிசி வழங்குவது, ரூ.50-க்கு மளிகை பொருள்கள் வழங்குவது மக்களை ஏமாற்றும் மோசடி திட்டங்கள். ரூ.50-க்கு வழங்கப்படும் மளிகை பொருள்களின் அளவை பார்த்தால் இது புரியும்.

1.84கோடி குடும்ப அட்டைகள் ரூ.1 அரிசி திட்டத்தில் பயன்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 8.24 கோடியை தாண்டுகிறது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.24 கோடிதான். மீதமுள்ள 2.25 கோடி பேர் குடும்ப அட்டைகளில் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8000 டாஸ்மார்க் கடைகளை மூடிவிட்டு அனைத்தையும் நியாயவிலைக் கடைகளாக மாற்ற வேண்டும். ஏற்கெனவே உள்ள நியாயவிலைக் கடைகளில் வழக்கமாக வழங்கும் பொருள்களை வழங்க வேண்டும். இந்த புதிய நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை அரசே விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம்தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.

ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் மீது மதவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அன்பை அடிப்படையாக கொண்டது கிறித்துவ மதம். பாதிரியார்கள், சகோதரிகள் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களைப் போல் சேவை செய்ய வேண்டும் என்று போட்டி போடாமல், அவர்கள் மீது பொறாமை கொண்டு தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி யார் எந்த மதத்தை பின்பற்றவும், மதப் பிரசாரம் செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்களின் மத உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பதையும், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதையும் நாகரிக சமுதாயம் ஏற்காது என்றார்.

No comments: