Monday, September 29, 2008

அரசு மதுக்கடையை அரசு மருந்துக்கடையாக மாற்றிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய வணிக வளாகத்தில் புதுச்சேரி அரசு நிறுவனம் (PAPSCO) கடந்த ஏழு ஆண்டுகளாக மதுக்கடையை நடத்தி வந்தது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரியாங்குப்பத்தின் மையப்பகுதியில் இந்தக் கடை இயங்கி வந்ததாலும் மலிவு விலையில் அனைத்து மதுவகைகளும் கிடைத்தாலும் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து குடிகாரர்களும் இந்தக்கடைக்கு குவிந்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்தது.

காதி துணிக்கடைக்கு அருகிலேயே இந்த மதுக்கடையை அரசு நடத்தியது வெட்கக்கேடு! இதனால் இந்த துணிக்கடைக்கு யாரும் வருவதில்லை. மேலும் அருகில் உள்ள பிற வணிக நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மதுக்கடைகளை தொடங்கிய நாளிலிருந்து பொதுமக்கள் இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரிடம் பொதுமக்களும் அப்பகுதி வியாபாரிகளும் பலமுறை முறையிட்டனர். கள்ளுக்கடை, சாராயக்கடை, பிராந்தி கடை என அனைத்து மதுக்கடைகளையும் அவர் நடத்தி வந்ததால் மக்களின் கோரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை

இந்நிலையில் 2006 சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் அவர்களிடம் பொதுக்களும் வியாபாரிகளும் முறையிட்டனர். கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆறு மாதத்திற்குள் மதுக்கடையை கடையை மூடிவிடுகிறேன் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அரசு மதுக்கடையை மூடிய சட்டமன்ற உறுப்பினர் அதே இடத்தில் அதே அரசு நிறுவனத்தின் மூலம் மலிவுவிலை மருத்துக்கடையை திறந்துள்ளார்.

மதுக்கடையை மூடிய சட்டமன்ற உறுப்பினரை பாராட்டியதோடு மருந்துக்கடை திறந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது புதியதாக திறந்துள்ள மருந்துக்கடையில் பொதுமக்கள் வாங்கும் அனைத்து மருந்துகளுக்கும் 5 விழுக்காடு கழிவு உண்டு. மேலும் ரூ.500-க்கு மேல் மருந்து வாங்கும் நோயாளிகளுக்கு ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து மருந்து வழங்குகின்றனர். பிறருக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து கூனிக்குருகிய அரசு ஊழியர்கள் தற்போது தன்மானத்தோடு நோயாளிகளுக்கு மருந்து வழங்குகின்றனர்.

இந்நிகழ்வை தமிழ்நாடு அரசு சற்று சிந்தித்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

No comments: