Tuesday, December 9, 2008

விவசாய நிலங்களை மனை வணிகத்திற்கு விற்காதீர்கள்: மருத்துவர் இராமதாசு

உழவர் பேரியக்கம் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இம்மாநாட்டில் மருத்துவர் இராமதாசு பேசியது:

நில மனை வணிகம் செய்பவர்கள் வந்து கேட்டால் விளை நிலங்களை விற்காதீர்கள்.

சிப்காட், சிட்கோ போன்றவற்றின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க விளைநிலங்களை அபகரிக்கின்றனர்.

விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என பேரவையில் முதல்வர் அறிவித்தார். ஆனால் அந்த உறுதிமொழியை அரசு காப்பாற்றவில்லை.

விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் நிலங்களை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொழில் நிறுவனங்கள் விளைநிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே தரும் காலம் வரும்.

வாழ்கின்ற உரிமையை இழந்து விட்ட விவசாயிகளுக்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது. வாழ்வதா, சாவதா என மத்திய, மாநில அரசுகளை விவசாயிகள் கேட்டு வருகின்றனர். விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகளின் புரட்சி வெடிக்கும்.

நமது நாட்டில் ஒரு மாதத்துக்கு 40 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் கோரிக்கைகள் நிறைவேறும்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் எனக் கூறி வருகின்றனர். ஆனால் விவசாயிகள் வளைந்து வளைந்து நடக்க முடியாத நிலைக்கு ஆளாகி விட்டனர்.

நகர்ப்புறத்தில் 44 சதவீதமும், கிராமப்புறத்தில் 56 சதவீதமும் விவசாயிகள் வசிக்கின்றனர். முன்னெல்லாம் விவசாயிகள் ரூ.10 முதல் போட்டு ரூ.100 சம்பாதித்தனர். ஆனால் தற்போது ரூ.100 முதல் போட்டு ரூ.10-தான் சம்பாதிக்கின்றனர்.

விவசாயிகளின் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, தனி நீர்ப்பாசன கொள்கை வகுக்க வேண்டும்.

நதிகள் இணைப்பு என்பது கனவாகவே உள்ளது. இணைப்புக்கு முன்பு நதிகளை தேசியமயமாக்க வேண்டும். மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் நபார்டு வங்கி நேரடியாக விவசாயிகளுக்கு கடன் தர வேண்டும்.

பாலாறு உள்பட அனைத்து ஆறுகளும் பாழடைந்து விட்டன. தடுப்பணைகள் கட்ட வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

இலவச கலர் டிவி வழங்க ரூ.2,300 கோடியை ஒதுக்கீடு செய்கின்றனர். அத்தொகையை விவசாயிகளின் நலனுக்காக செலவிடலாம்.

உரம், விதையை இலவசமாக தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு லிட்டர் பால் விலை ரூ.12 என விற்கப்படுகிறது. பால் உற்பத்தி செய்வோருக்கு லிட்டருக்கு ரூ.25 தர வேண்டும் என்றார் மருத்துவர் இராமதாசு.

நன்றி: தினமணி, தினத்தந்தி.

1 comment:

ஆதித்தன் said...

"தொழில் நிறுவனங்கள் விளைநிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே தரும் காலம் வரும்."
என்று மருத்துவர் கூறியிருப்பது நம்பிக்கை தருவதாக இருந்தாலும், அப்படி வருகின்ற நிலங்கள் வ்ளமற்றுப்போய் பயிர் விளையத்தகுதியற்றதாகவே இருக்கும்.
ஆதலால் நிறுவனங்கள் தரும் என்று காத்திருக்காமல் நாமே நம் வாழ்வாதாரத்தைக் காக்க களத்தில் இறங்க வேண்டும்.